அப்பா உடல்நலனில் நல்ல முன்னேற்றம்: எஸ்.பி.சரண் தகவல்

அப்பா உடல்நலனில் நல்ல முன்னேற்றம்: எஸ்.பி.சரண் தகவல்
Updated on
1 min read

அப்பா எஸ்.பி.பி நல்லபடியாக மூச்சு விடுகிறார். இதை ஒரு நல்ல முன்னேற்றமாக மருத்துவர்கள் பார்க்கிறார்கள் என்று மகன் எஸ்.பி.சரண் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

எஸ்.பி.பிக்கு தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து மகன் எஸ்.பி.சரண் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் இன்று (ஆகஸ்ட் 16) எஸ்.பி.சரண் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பேசியிருப்பதாவது:

"இது தாமதமான தகவல் தான். ஆனால் மருத்துவ குழுவினரிடமிருந்து நாங்கள் முழுமையான தகவலை பெற விரும்பினோம். இன்று ஞாயிற்றுக்கிழமையாக மற்றும் அப்பா மூன்றாவது தளத்திலிருந்து ஐசியூவில் இருந்து ஆறாவது தளத்திலிருந்த தனிப்பட்ட ஐசியூவில் மாற்றப்பட்டார். இதுவும் தாமதத்துக்கு காரணம்.

மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் அப்பாவின் உடல்நலனில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அப்பா மருத்துவர்களிடம் தம்ப்ஸ் அப் குறியைக் காட்டுகிறார், அவருக்கு மருத்துவர்களை அடையாளம் தெரிகிறது. ஆனால் இன்னும் வென்டிலேஷனில் தான் இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு இருந்ததை விட தற்போது சற்று நல்லபடியாக மூச்சு விடுகிறார். இதை ஒரு நல்ல முன்னேற்றமாக மருத்துவர்கள் பார்க்கிறார்கள்.

அவர் தற்போது குணமடைந்து வருகிறார். மருத்துவ குழுவினர் கடுமையாக முயற்சி செய்து வருகிறார்கள். அவர் முழுமையாகக் குணமடைய நீண்ட நாட்கள் ஆகும். நாங்கள் முழு நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஆனால் இது ஒரு நாளிலோ இரண்டு நாட்களிலோ நடந்து விடாது. ஒரு வாரம் கூட ஆகலாம். ஆனால் நிச்சயமாக விரைவாக குணமடைந்து வீடு திரும்புவார்.

அவர் நல்ல படியாக இருப்பதில் எங்களுக்கும் மருத்துவர்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. அவர் முழுமையான மயக்கத்தில் இல்லை. அவரால் பிறரை அடையாளம் காணமுடிகிறது. தொடர்ந்து அவருக்காகப் பிரார்த்திப்போம். உங்களுடைய அன்புக்கும் பிரார்த்தனைகளுக்கும் நானும் என் குடும்பத்தினரும் உங்களுக்கு மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.

என் அம்மாவும் தற்போது குணமடைந்து வருகிறார். செவ்வாய் அல்லது புதன் அவரும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இதுவும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. அவரை தொடர்ந்து விரைவில் அப்பாவும் வீடு திரும்புவார், நன்றி"

இவ்வாறு எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ பதிவு எஸ்.பி.பி ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. மேலும், எஸ்.பி.பி உடல்நிலை கவலைக்கிடம் எனத் தகவல் வெளியானதிலிருந்து இந்தியத் திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்காகப் பிரார்த்திக்குமாறும் வேண்டுகோள் விடுத்தனர். சிலர் இணையம் வழியே எஸ்.பி.பிக்காக வேண்டுதல் நிகழ்ச்சியும் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in