Published : 06 Aug 2020 07:03 PM
Last Updated : 06 Aug 2020 07:03 PM

'இந்தியன் 2' படப்பிடிப்பில் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி

சென்னை

'இந்தியன் 2' படப்பிடிப்பில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் படம் 'இந்தியன் 2'. சென்னைக்கு அருகே தனியார் ஸ்டுடியோவில் அரங்குகள் அமைத்து நடைபெற்று வந்த படப்பிடிப்பில் பிப்ரவரி 19-ம் தேதி இரவு கோர விபத்து நடைபெற்றது. இதில் ஷங்கரின் உதவி இயக்குநராக பணிபுரிந்த கிருஷ்ணா (34), மற்றும் ஊழியர்கள் மது (29), சந்திரன் (60) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் பலத்த காயமடைந்தார்கள்.

இந்தச் சம்பவத்தால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு லைகா நிறுவனம் 2 கோடி ரூபாய், கமல் 1 கோடி ரூபாய் மற்றும் இயக்குநர் ஷங்கர் 1 கோடி ரூபாய் நிவாரணத் தொகையாக அறிவித்தார்கள். ஆனால், யாருக்குமே பணம் கொடுக்கப்படாமல் இருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்ததே காரணம் என கூறப்பட்டது.

இதனிடையே, இன்று (ஆகஸ்ட் 6) மாலை 'இந்தியன் 2' விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, கமல், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது:

"லைகா நிறுவனம், கமல் சார், ஷங்கர் சார் இணைந்து 4 கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தார்கள். கரோனா ஊரடங்கினால் தொழிலாளர்கள் குடும்பம் சென்னை, ஆந்திரா என்று சென்றுவிட்டதால் அதை வழங்குவதில் காலதாமதம் ஆனது. தற்போது அவர்கள் சென்னை வந்துவிட்டதால் இழப்பீட்டு தொகையை வழங்கியுள்ளோம்.

இதுவரை திரைப்பட வரலாற்றில் பல்வேறு விபத்துக்கள், மரணங்கள் நிகழ்ந்துள்ளது. ஆனால் முதல்முறையாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தயாரிப்பாளர், இயக்குநர், நாயகன் இணைந்து மிகப்பெரிய இழப்பீட்டு தொகையாக வழங்கி புதிய ஆரம்பத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.

இதுவரை நடந்துள்ள மரணங்களில் பல்வேறு விதமான சோதனைகளை அந்தக் குடும்பங்கள் சந்தித்து, 5 லட்சம் வரை சிறிய நிவாரணத்துடன் தான் குடும்பத்தினர் நடுத்தெருவில் நிற்கும் சூழல் இருந்தது. தற்போது தொழிலாளர்கள் மறைந்துவிட்டதால், 'இந்தியன் 2' குழுவினர் இணைந்து பெரிய இழப்பீடு வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மறைந்த சந்திரனின் மனைவி ராதா, தொழிலாளர் மதுவின் தந்தை, மறைந்த உதவி இயக்குநர் கிருஷ்ணாவின் மனைவிக்கும், படுகாயம் அடைந்த லைட்மேன் ராமராஜன் ஆகியோருக்கு இந்த நிவாரண தொகை பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இறந்த அனைவருக்கும் 1 கோடி ரூபாயும், படுகாயம் அடைந்த ராமராஜனுக்கு 90 லட்ச ரூபாயும், காயமடைந்த தொழிலாளர்களுக்கு 10 லட்ச ரூபாய் என மொத்தம் 4 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படுகிறது"

இவ்வாறு ஆர்.கே.செல்வமணி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x