இந்திய சினிமாவின் முக்கியமான மகன் கே.பாலசந்தர்: கமல் புகழாரம்

இந்திய சினிமாவின் முக்கியமான மகன் கே.பாலசந்தர்: கமல் புகழாரம்

Published on

இந்திய சினிமாவின் முக்கியமான மகன் கே.பாலசந்தர் என்று கமல் தனது ட்விட்டர் பதிவில் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழ்த் திரையுலகின் ஆளுமைகளில் ஒருவரான இயக்குநர் கே.பாலசந்தருக்கு இன்று (ஜூலை 9) 90-வது பிறந்த நாளாகும். ரஜினி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்களை அறிமுகப்படுத்தியவர். 'நீர்க்குமிழி', 'சர்வர் சுந்தரம்', 'இரு கோடுகள்', 'அவள் ஒரு தொடர்கதை', 'அபூர்வ ராகங்கள்', 'தண்ணீர் தண்ணீர்' உள்ளிட்ட பல்வேறு சிறந்த படங்களை இயக்கி, புகழ் பெற்றவர். 9 தேசிய விருதுகள் வென்ற கே.பாலசந்தருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் தாதாசாகெப் பால்கே விருது ஆகியவற்றை வழங்கி கவுரவித்தது.

உடல்நலக் குறைவால் 2014, ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி கே.பாலசந்தர் காலமானார். இன்று கே.பாலசந்தரின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள், பிரபலமானவர்கள் ஆகியோர் கே.பி. பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.

இதன் வீடியோ பதிவுகள் கே.பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

இதில் கமல் பேசிய வீடியோவும் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் மேற்கோளிட்டு கமல் கூறியிருப்பதாவது:

"கே.பாலசந்தர். நான் என்னுடைய பதின்பருவத்தில் கேட்ட பெரிய புகழைக் கொண்ட சிறிய பெயர். என்னைப் போன்ற ஒரு நடிகனின் வாழ்க்கையில் அவர் பல வேடங்களை ஏற்பார் என்று யாரும் நினைக்கவில்லை. கொடையாளர், வழிகாட்டி, ஒத்துழைப்பாளர், தந்தை. தற்போது குழந்தை போன்ற அவருடைய சுறுசுறுப்பை எண்ணிப்பார்க்கிறேன். என் தந்தையின் பெருமையை உணர்கிறேன். இந்திய சினிமாவின் இந்த முக்கியமான மகனுக்கு எனது வணக்கங்கள்".

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in