

கரோனா பற்றிய அச்சம் தேவையில்லை என்றும், ஆனால் அலட்சியம் கூடாது என்றும் விவேக் தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு படப்பிடிப்புமே இல்லாமல் நடிகர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். இதில் தனது சமூக வலைதளம் மூலமாகவும், பேட்டிகள் மூலமாகவும் தொடர்ச்சியாக கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருபவர் நடிகர் விவேக்.
தற்போது கரோனா தொற்று தொடர்பாக நடிகர் விவேக் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
"தமிழகத்தில் கரோனா தொற்றுள்ள 50 சதவீதத்துக்கும் மேலான மக்கள் குணமடைந்து வீடு திரும்புகிறார்கள் என்பது நம்பிக்கை அளிக்கிறது. ஆனால், கரோனா தொற்றின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் போதிய முன்னுரிமை அளிக்கவில்லையோ என்பது அதிர்ச்சி அளிக்கிறது. கரோனா பற்றிய அச்சம் தேவையில்லை. அதே வேளையில் அலட்சியம் கூடாது.
நிறையப் பேர் மாஸ்க் என்ற பெயரில் ஏதோ ஒன்றைப் போட்டிருப்பதைப் பார்க்கிறேன். மூக்கையும், வாயையும் மூடுமாறு பலர் மாஸ்க் அணிவதில்லை. பல பேர் ஜாலியாக மாஸ்க்கை கழுத்தில் தொங்கவிட்டுள்ளனர். சில பேர் மாஸ்க்கை ஒற்றைக் காதில் ஸ்டைலாகத் தொங்கவிட்டுள்ளனர். இப்படியா மாஸ்க் போடுவது?
இந்தக் கரோனா ஊரடங்கில் நாம் சாப்பிட்ட பிறகு, மற்றவர்கள் சாப்பிட்ட தட்டுடன் சேர்த்துக் கழுவுவது வீட்டுக்கு எவ்வளவு உதவியாக இருக்கும் என்று தெரிந்துகொண்டேன். கார், பைக், சைக்கிள் உள்ளிட்டவற்றை நாமே கழுவுவது எவ்வளவு கடினம் என்பதைத் தெரிந்துகொண்டேன். சினிமா சாராத நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களோடு தொடர்ச்சியாகப் பேசி வருகிறேன்.
கரோனாவை விட மோசமானது என்னவென்றால் நமக்கு க்கரோனா வந்துவிடுமோ என்ற பயம்தான். நமக்கு ஒன்றும் வராது. நாம் நன்றாக இருக்கிறோம் என்று நினைக்க வேண்டும்".
இவ்வாறு விவேக் தெரிவித்துள்ளார்.