சுயசரிதை எழுதி வரும் கார்த்திக்

சுயசரிதை எழுதி வரும் கார்த்திக்

Published on

கரோனா ஊரடங்கு சமயத்தில் தனது சுயசரிதையை எழுதிக் கொண்டிருக்கிறார் கார்த்திக்.

பாரதிராஜா இயக்கத்தில் உருவான 'அலைகள் ஒய்வதில்லை' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் கார்த்திக். அதற்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நாயகனாக வலம் வந்தார். பின்பு சர்ச்சைகளில் சிக்கி சில காலம் படங்களில் கவனம் செலுத்துவதைக் குறைத்தார். பின்பு அரசியலிலும் ஈடுபட்டார்.

'ராவணன்', 'அநேகன்', 'தானா சேர்ந்த கூட்டம்' மற்றும் 'Mr.சந்திரமெளலி' உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு படம் இயக்குவதற்காக கார்த்திக் கதை எழுதி வருவதாகத் தகவல் வெளியானது.

தற்போது இந்தக் கரோனா ஊரடங்கில் வீட்டிலேயே இருப்பதால், தனது சுயசரிதையை எழுதி வருகிறார் கார்த்திக். இதில் அவர் திரையுலகிற்கு வந்த விதம், பிரபலங்களுடனான நட்பு, சந்தித்த மனிதர்கள் உள்ளிட்டவற்றை மட்டும் எழுதி வருகிறார். இதைப் புத்தகமாக வெளியிடுவாரா என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை.

மேலும், முழுமையாக 2 படங்களுக்கான கதையை எழுதி முடித்துவிட்டார் கார்த்திக். கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன், அந்தப் படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் தொடர்பான பேச்சுவார்த்தையும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in