சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் - பாரதிராஜா

சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் - பாரதிராஜா
Updated on
1 min read

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் ஜெய் மற்றும் பாரதிராஜா இணைந்து நடிக்கவுள்ளனர்.

'கென்னடி கிளப்' படத்துக்குப் பிறகு, அடுத்து இயக்கவுள்ள படத்துக்குக் கதை எழுதி வந்தார் இயக்குநர் சுசீந்திரன். சில மாதங்களுக்கு முன்பு காலையில் நடைப்பயிற்சி சென்றபோது, சிறுவிபத்தில் சிக்கினார். அதற்குப் பிறகு கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதால், சொந்த ஊரில் குடும்பத்தினருடன் இருக்கிறார்.

அப்போது சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே புதிதாகக் கதையொன்றை எழுதி முடித்துள்ளார். அந்தப் படத்தைக் கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் சுசீந்திரன் தொடங்குவார் எனத் தெரிகிறது.

அந்தக் கதையில் ஜெய் நாயகனாக நடிக்கவுள்ளார். அவருடன் முக்கியக் கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிக்கவுள்ளார். முன்னதாக, சுசீந்திரன் இயக்கிய 'பாண்டிய நாடு', 'கென்னடி கிளப்' ஆகிய படங்களில் பாரதிராஜா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் ஜெய் - பாரதிராஜா ஆகியோருடன் நடிக்கவிருப்பவர்கள் தேர்வு கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் தொடங்கும் எனத் தெரிகிறது. இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in