ஷங்கர் தயாரித்தால் மட்டுமே 'ஈரம் 2': இயக்குநர் அறிவழகன் உறுதி

ஷங்கர் தயாரித்தால் மட்டுமே 'ஈரம் 2': இயக்குநர் அறிவழகன் உறுதி
Updated on
1 min read

ஷங்கர் தயாரித்தால் மட்டுமே 'ஈரம் 2' இயக்குவேன் என்று அறிவழகன் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் தயாரிப்பில், அறிவழகன் இயக்குநராக அறிமுகமான படம் 'ஈரம்'. ஆதி, சிந்து மேனன், சரண்யா மோகன், நந்தா, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னணி இசை, ஒளிப்பதிவு, கிராபிக்ஸ் என பார்வையாளர்களைப் படம் கட்டிப் போட்டது.

இந்தப் படத்துக்குப் பிறகு 'வல்லினம்', 'ஆறாது சினம்', 'குற்றம் 23' ஆகிய படங்களை இயக்கினார் அறிவழகன். தற்போது அருண் விஜய் நடித்து வரும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கரோனா ஊரடங்கில் நேரலை மூலமாக பேட்டியொன்று அளித்துள்ளார் இயக்குநர் அறிவழகன். அந்தப் பேட்டியில் 'ஈரம் 2' குறித்துப் பேசியுள்ளார்.

அதில் இயக்குநர் அறிவழகன் பேசியிருப்பதாவது:

" 'ஈரம்' வெளியான 10 நாட்களிலேயே, அதன் 2-ம் பாகம் குறித்து யோசனை வந்தது. அது ஆர்வத்தைத் தூண்டும் தொடர்ச்சியாகவும், முதல் பாகத்திலிருந்து முற்றிலுமாக வேறுபட்டு, எதிர்பாராத ஒன்றாகவும் இருக்கும். ஆனால், முதல் பாகத்தைத் தயாரித்த ஷங்கர் சார் தயாரித்தால் மட்டுமே 'ஈரம் 2' உருவாகும் என்பது உறுதி.

அவர்தான் என் குரு, என் முதல் படமான 'ஈரம்' படம் உருவானதற்குப் பின்னால் இருந்தவரும் அவரே. எனவே, அதன் 2-ம் பாகத்தை எடுத்தால் அதை எஸ் பிக்சர்ஸ் பெயரின் கீழ் மட்டுமே எடுப்பேன். ஷங்கர் சார் தயாரிக்கத் தயாராகும் போது 'ஈரம் 2' படத்தை எதிர்பார்க்கலாம். கதை தயாராக இருக்கிறது".

இவ்வாறு இயக்குநர் அறிவழகன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in