புலம்பெயர் தொழிலாளர் பிரச்சினை என்பது ஒரு டைம் பாம், பால்கனி அரசு தரையில் நடப்பவற்றையும் கவனிக்க வேண்டும்: பாந்த்ரா சம்பவம் பற்றி கமல் விமர்சனம்

புலம்பெயர் தொழிலாளர் பிரச்சினை என்பது ஒரு டைம் பாம், பால்கனி அரசு தரையில் நடப்பவற்றையும் கவனிக்க வேண்டும்: பாந்த்ரா சம்பவம் பற்றி கமல் விமர்சனம்
Updated on
1 min read

புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நடந்த தடியடி குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்

ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் மே- 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு ஏப்.14ஆம் தேதியோடு முடிவடையும் நிலையில் தங்கள் ஊர்களுக்கு செல்லலாம் எனக் கருதி வெளி மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் திரண்டனர். ஆனால் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், ரயில்கள் இயக்கப்படாது எனவும் தகவல் வெளியானதால் அவர்கள் ஆத்திரமடைந்தனர்.

தங்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில்லை என்பதால் இனியும் தங்களால் இங்கு இருக்க முடியாது என்றும் கூறி அவர்கள் போராட்டம் நடத்தினர். சம்பவமறிந்து அங்கு விரைந்து வந்த போலீஸார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நடந்த தடியடி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:

‘அனைத்து பால்கனி மக்களும் தரையை கூர்ந்து கவனிக்கவும். முதலில் டெல்லி, தற்போது மும்பை. புலம்பெயர் தொழிலாளர் பிரச்சினை என்பது ஒரு டைம் பாம் போன்றது. கரோனாவை விட மிகப்பெரிய இந்த பிரச்சனையை வெடிப்பதற்கு முன்பே செயலிழக்கச் செய்தல் வேண்டும். பால்கனி அரசு தரையில் நடப்பவற்றையும் கவனிக்க வேண்டும்’

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in