தனது 4 மாடிக் கட்டிடத்தை மாநகராட்சி பயன்பாட்டுக்குக் கொடுத்த ஷாரூக் கான்

தனது 4 மாடிக் கட்டிடத்தை மாநகராட்சி பயன்பாட்டுக்குக் கொடுத்த ஷாரூக் கான்
Updated on
1 min read

பாலிவுட் நடிகர் ஷாரூக் கானும் அவரது மனைவி கவுரியும், அவர்களது 4 மாடி அலுவலகக் கட்டிடத்தை, ப்ரிஹான் மும்பை மாநகராட்சியின் பயன்பாட்டுக்குக் கொடுத்துள்ளனர். இந்த இடம் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள், வயதானவர்களைத் தனிமைப்படுத்தப் பயன்படுத்தப்படும்.

இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் தொற்று என்பது அச்சுறுத்தி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. மேலும், கரோனா தொற்று உள்ளவர்களைக் குணப்படுத்தப் போதுமான மருத்துவ வசதி, உபகரணங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசித்து வருகிறது.

இது தொடர்பாக திரையுலகப் பிரபலங்களும் தங்களுடைய வீடுகள், மண்டபங்கள் உள்ளிட்டவற்றை அரசின் பயன்பாட்டுக்குக் கொடுத்து வருகிறார்கள். தற்போது ஷாரூக் கானும் தனது 4 மாடிக் கட்டிடத்தை மும்பை மாநகராட்சிக்குக் கொடுத்துள்ளார்.

ஷாரூக் கான் மற்றும் அவரது மனைவியின் தாராள உதவிக்கு மும்பை மாநகராட்சி, "ஒற்றுமையே வலிமை. ஷாரூக் கான், கவுரி கான் இருவருக்கும் நன்றி. அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக இருந்த 4 மாடி அலுவலகக் கட்டிடத்தை எங்கள் பயன்பாட்டுக்கு, தனிமைப்படுத்தப்பட்டவர்களைத் தங்க வைக்கக் கொடுத்துள்ளார்கள். இதில் தனிமைப்படுத்தப்படும் குழந்தைகள், பெண்கள், வயதானவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களும் உள்ளன. மிகவும் சிந்தனைமிக்க, சமயத்திற்கேற்ற செயல்" என்று ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன் ஷாரூக் கான், கோவிட்-19 நிவாரணத்துக்காக, அவரது நிறுவனங்கள் எந்தெந்த அமைப்புகளோடு சேர்ந்து பணியாற்றும் என்ற மிகப்பெரிய நன்கொடை அறிவிப்பை வெளியிட்டிருந்தார். மேலும் பிரதமரின் நிவாரண நிதிக்கும் பங்காற்றியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in