கரோனா அச்சம்: 'அண்ணாத்த', 'வலிமை', 'மாநாடு' படப்பிடிப்புகள் பாதிப்பு

கரோனா அச்சம்: 'அண்ணாத்த', 'வலிமை', 'மாநாடு' படப்பிடிப்புகள் பாதிப்பு
Updated on
1 min read

கரோனா வைரஸ் அச்சத்தால், ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் 'அண்ணாத்த', 'வலிமை' மற்றும் 'மாநாடு' படப்பிடிப்புகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உலகமெங்கும் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லி, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பள்ளிகள், திரையரங்குகள், மல்டிப்ளக்ஸ்கள் மூட அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தில் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த கரோனா வைரஸ் அச்சம் படப்பிடிப்புகளைப் பாதித்துள்ளது. எப்படியென்றால், பல்வேறு படப்பிடிப்புகள் கரோனா வைரஸ் அச்சத்தால் நிறுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்குத் திரையுலகினர் மார்ச் 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை எந்தவொரு படப்பிடிப்புமே நடத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகளைப் பாதித்துள்ளது.

ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பும் மார்ச் 19-ம் தேதி முதல் நிறுத்த நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும், ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த 'அண்ணாத்த' மற்றும் 'வலிமை' படங்களின் படப்பிடிப்புக்கான அரங்க வேலைகளும் நிறுத்தப்படவுள்ளன. தெலுங்குப் படங்கள் மட்டுமன்றி, அங்கு நடைபெற்று வரும் தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகளுக்கும் இதே நிலைதான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னை திரும்பி, இங்கு படப்பிடிப்பை நடத்தலாமா என்று 'அண்ணாத்த', 'வலிமை' மற்றும் 'மாநாடு' படக்குழுவினர் ஆலோசனையில் இறங்கியுள்ளனர். ஆனால், பெப்சி அமைப்பினர் இங்குள்ள சூழல் தொடர்பாக என்ன முடிவு எடுக்கலாம் என்று ஆலோசனை செய்து வருகிறார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in