'ஜிப்ஸி' தணிக்கையில் நடந்த என்ன? - இயக்குநர் ராஜு முருகன் தகவல்

'ஜிப்ஸி' தணிக்கையில் நடந்த என்ன? - இயக்குநர் ராஜு முருகன் தகவல்
Updated on
1 min read

'ஜிப்ஸி' படத்தின் தணிக்கையில் நடந்தது என்ன என்பதை இயக்குநர் ராஜு முருகன் தெரிவித்துள்ளார்

ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'ஜிப்ஸி'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை அம்பேத்குமார் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் அனைத்து முடிவடைந்து, தணிக்கையில் சிக்கியது. பல்வேறு காட்சிகளை நீக்க வேண்டும், வசனத்தை மியூட் செய்ய வேண்டும் எனத் தணிக்கை அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

இறுதியில் அனைத்தும் செய்யப்பட்டு 'ஜிப்ஸி' வெளியாகியுள்ளது. கலவையான விமர்சனங்கள் பெற்று வரும் இந்தப் படம் வசூல் ரீதியில் எப்படி இருக்கிறது என்பது வரும் நாட்களில் தெரியவரும். இதனிடையே இந்தப் படத்தின் தணிக்கையில் என்ன நடந்தது என்பதை இயக்குநர் ராஜு முருகன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதில் ராஜு முருகன் கூறியிருப்பதாவது:

“இந்தப் படத்தில் 50-க்கும் மேற்பட்ட கட் இருக்கும். அதே போல் கலரை ப்ளாக் அண்ட் ஒயிட்டாக மாற்றச் சொன்னார்கள். ஒரு கட்டத்தில் தணிக்கை அதிகாரிகள் சொன்னதை ஓப்புக் கொண்டோம். ஏனென்றால், இந்தப் படத்தைப் பற்றி அவர்களுக்கு ஒரு பார்வை இருக்கிறது, எனக்கொரு பார்வை இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை படம் வெளியாக வேண்டும் என்பது தான் எண்ணம். கதைக் கெட்டுப் போகாமல் இந்தப் படத்தை வெளியே கொண்டு வருவதற்கு ஒரு போராட்டம் இருந்தது. அதைச் சரியாகக் கொண்டு வந்துவிட்டேன்.

மத அடிப்படை வாதத்துக்கு எதிரான படம் தான் 'ஜிப்ஸி'. அது இந்துத்துவாக இருந்தால் என்ன, இஸ்லாமிய அடிப்படை வாதமாக இருந்தால் என்ன?. அனைத்துமே ஒன்று தான். மதம், வழிபாடு என்பது ஒவ்வொருத்தருடைய விருப்பம். அதை வைத்து அரசியல் செய்து, அதிகாரத்தை அடைவது தான் தவறு”

இவ்வாறு ராஜு முருகன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in