அஸ்வின் சரவணன் இயக்கத்தில் பிரசன்னா - சமந்தா

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் பிரசன்னா - சமந்தா
Updated on
1 min read

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் பிரசன்னா மற்றும் சமந்தா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

'மாயா' படத்தைத் தொடர்ந்து அஸ்வின் சரவணன் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் 'கேம் ஓவர்'. இந்தப் படத்துக்கு முன்னதாக அவர் இயக்கிய 'இறவாக்காலம்' பைனான்ஸ் சிக்கலால் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

தற்போது, தனது அடுத்த படத்துக்கான பணிகளைத் தொடங்கியுள்ளார் அஸ்வின் சரவணன். இதில் சமந்தா நடிப்பது உறுதியாகி இருந்தது. மேலும், 'மாஃபியா' படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் பிரசன்னா, தனது அடுத்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ளது என்றும் அஸ்வின் சரவணன் இயக்கவுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் பிரசன்னா மற்றும் சமந்தா இருவரும் இணைந்து நடிக்கவுள்ளது உறுதியாகிவிட்டது. இந்தப் படம் ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்பது விரைவில் தெரியவரும்.

மார்ச் மாதத்தில் இந்தப் படம் தொடங்கும் எனத் தெரிகிறது. இதில் நடித்துக்கொண்டே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்திலும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் சமந்தா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in