

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'கர்ணன்' படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் முடிவடையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் படத்தை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டு, மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கர்ணன்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தாணு தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஒரேகட்டமாக முடிக்கத் திட்டமிட்டு தனுஷிடம் தேதிகள் வாங்கியது படக்குழு. அதன்படியே பிப்ரவரி மாதத்தில் முழுமையாக முடிக்க பணியாற்றி வருகிறது படக்குழு.
இதில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்டோருடன் திருநெல்வேலி வட்டார மொழி பேசும் அங்குள்ள நடிகர்கள் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
'கர்ணன்' படத்தை முடித்துவிட்டு, செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்துவார் தனுஷ் எனத் தெரிகிறது. ஏனென்றால், ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு ஆரம்பக்கட்டப் பணிகளுக்கே நீண்ட நாட்கள் தேவைப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.