

தமிழ்ப் படங்களில் நடிப்பதைக் குறைத்துவிட்டதாக நினைக்கவில்லை என்று பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு மாதவன் பதிலளித்துள்ளார்.
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், கதிர், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்துக்குப் பிறகு தமிழில் நீண்ட நாட்களாக எந்தவொரு படத்திலும் நடிக்காமலேயே இருந்தார்.
தற்போது 'மாறா' என்ற படத்தில் நடித்து வருகிறார் மாதவன். திலீப் குமார் இயக்கி வரும் இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷிவதா நாயர், மெளலி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதனிடையே, சென்னையில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டார் மாதவன்.
அப்போது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
'தமிழ்ப் படங்களில் நடிப்பதைக் குறைத்துவிட்டீர்களா' என்ற கேள்விக்கு மாதவன், "தமிழ்ப் படங்களில் நடிப்பதைக் குறைத்துவிட்டதாக நினைக்கவில்லை. 'விக்ரம் வேதா’ 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. மக்களுக்கு எந்த மாதிரியான கதைகள் பிடிக்கும் என்பதைத் தேர்வு செய்து நடிக்கிறேன்.
ஏனென்றால் அதுவொரு பெரிய பொறுப்பு. குடும்பத்தோடு வண்டியில் ஏறி தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும்போது அவர்களைக் கடுப்பு ஏற்றாமல் வீட்டுக்கு அனுப்புவது ஒரு சவால். 'இறுதிச்சுற்று’, ’விக்ரம் வேதா’ மாதிரியான கதைகள் எழுதுபவர்கள் குறைவாக இருக்கிறார்கள். மேலும், நான் இயக்கி வரும் 'ராக்கெட்ரி' படத்தின் பணிகளில் பிஸியாக இருக்கிறேன். அது இந்த ஆண்டு வெளியாகும்" என்று பதிலளித்தார் மாதவன்.
மேலும், டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் மற்றும் குடியுரிமைச் சட்டத் திருத்தம் உள்ளிட்டவை குறித்த கேள்விகளுக்கு 'இது அதற்கான இடமல்ல' என்று கூறி மறுத்துவிட்டார் மாதவன்.