

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'டகால்டி' மற்றும் 'சர்வர் சுந்தரம்' ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளன.
'தில்லுக்கு துட்டு 2' மற்றும் 'ஏ1' ஆகிய படங்களுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, சந்தானம் நடிக்கும் படங்களுக்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதில் சந்தானம் நடிப்பில் உருவாகி வந்த 'டகால்டி' திரைப்படம் ஜனவரி 31-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு.
விஜய் ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தை சந்தானம் மற்றும் எஸ்.பி.செளத்ரி இணைந்து தயாரித்துள்ளனர். இதில் ரித்திகா சென், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் பணிகள் அனைத்தும் முடிந்து, விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தற்போது, கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தங்களுடைய 'சர்வர் சுந்தரம்' படமும் ஜனவரி 31-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது. பால்கி இயக்கியுள்ள இந்தப் படம் தயாராகி நீண்ட மாதங்கள் ஆகின்றன. ஆனால், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பைனான்ஸ் சிக்கலால் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது.
ஜனவரி 31-ம் தேதி வெளியீடு என சந்தானத்தின் இரண்டு படங்களின் விளம்பரமும் வெளியாகியுள்ளதால், விநியோகஸ்தர்கள் மத்தியில் சிறு குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால், ஏதேனும் ஒரு படம் தள்ளிவைக்கப்படும் என்பது உறுதி.