10 கோடி ரூபாயில் உருவான பிரம்மாண்ட அரங்கில் லெஜண்ட் சரவணன் நடனம்

10 கோடி ரூபாயில் உருவான பிரம்மாண்ட அரங்கில் லெஜண்ட் சரவணன் நடனம்
Updated on
1 min read

லெஜண்ட் சரவணன் நாயகனாக நடித்து வரும் படத்தின் பாடல் 10 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தனது வியாபார விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்த லெஜண்ட் சரவணனுக்கு நாயகன் ஆசை வந்தது. இறுதியில் தனது கடைகளின் விளம்பரங்களை இயக்கிய ஜேடி - ஜெர்ரி இணையே படத்தை இயக்க ஒப்பந்தமானார்கள்.

சென்னையில் டிசம்பர் 1-ம் தேதி படத்தின் பூஜை படப்பிடிப்புடன் தொடங்கியது. லெஜண்ட் சரவணனுக்கு நாயகியாக புதுமுகம் கீத்திகா திவாரி நடித்து வந்தார். முதற்கட்டப் படப்பிடிப்பில் பிரம்மாண்டமான பாடல் காட்சி ஒன்றைப் படமாக்கியுள்ளது படக்குழு.

10 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமான அரண்மனை போல் அரங்கம் அமைத்து இந்தப் பாடலைப் படமாக்கியுள்ளனர். இதில் லெஜண்ட் சரவணனுடன் நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்கள் நடனமாடியுள்ளனர். அவர்கள் அனைவருமே லெஜண்ட் சரவணணின் நடனத்தைப் பார்த்து வியந்து, கைதட்டிப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

விரைவில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, பொள்ளாச்சி, இமயமலை மற்றும் வெளிநாடுகளில் நடக்கவுள்ளது. பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் லெஜண்ட் சரவணனுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராகவும், வசன கர்த்தாவாகப் பட்டுக்கோட்டை பிரபாகரும், எடிட்டராக ரூபனும் பணிபுரிந்து வருகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in