Published : 19 Dec 2019 05:06 PM
Last Updated : 19 Dec 2019 05:06 PM
குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்துக்கு கமல் ஆதரவு தெரிவித்ததற்காக குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார்.
குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் டெல்லி, உத்தப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று (டிசம்பர் 18) சென்னை பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தி வந்த மாணவர்களை கமல் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இது தொடர்பாக ட்விட்டர் தளத்துக்குத் திரும்பிய குஷ்பு, "இந்த தேசம் மதச்சார்பின்மையால் இயங்குகிறது. மதத்தினால் அல்ல. அரசியல் தாண்டி குரல் எழுப்பியுள்ள கமல்ஹாசனுக்கு வாழ்த்துகள். மாணவர்களுக்கு இந்நேரத்தில் கை கொடுப்பது அவசியமானதாகும். வாழ்த்துகள் சார். உங்களைப்போல் இன்னும் நிறைய பேர் வரவேண்டும்" என்று தெரிவித்தார்
குஷ்புவின் வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கமல், குஷ்புவின் ட்விட்டர் தளத்தைக் குறிப்பிட்டு, "உங்கள் ஆதரவுக்கு நன்றி குஷ்பு. நம் குரல்கள் விரைவில் லட்சக்கணக்கில் மாறும். ஜனநாயக இந்தியாவின் அக்கறையில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனும் இந்தப் போராட்டத்துக்கு வலு சேர்க்க வேண்டும். கிளர்ச்சி இப்போதுதான் ஆரம்பமாகியிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT