

பாரி கே.விஜய் இயக்கத்தில் வைபவ் நடிக்கும் 'ஆலம்பனா' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
'சிக்சர்' படத்தைத் தொடர்ந்து 'லாக்கப்', 'காட்டேரி', 'டாணா' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வந்தார் வைபவ். அதனைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் பாரி கே.விஜய் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஒப்பந்தமானார்.
அந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' என்ற படம் தமிழக மக்களிடையே பிரபலம். அதே பாணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும், சந்துருவும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கவுள்ளனர்.
இதில் பார்வதி நாயர், முனீஷ்காந்த், திண்டுக்கல் ஐ.லியோனி, காளி வெங்கட், ஆனந்த்ராஜ், முரளிசர்மா, கபீர் சிங் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். 'ஆலம்பனா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது. வைபவ் நடிப்பில் உருவான படங்களில் அதிக பொருட்செலவில் உருவாகும் படம் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இசையமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி, ஒளிப்பதிவாளராக வினோத் ரத்தினசாமி, எடிட்டராக ஷான் லோகேஷ், சண்டை இயக்குநராக பீட்டர் ஹெய்ன், கலை இயக்குநராக கோபி ஆனந்த் ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரியவுள்ளனர்.