

பெண் மருத்துவர் பலாத்காரம் தொடர்பாகக் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என்பதற்கான விளக்கத்தை சமந்தா தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து முகமது பாஷா, சிவா, நவீன் மற்றும் சென்ன கேசவலு ஆகியோரைக் கைது செய்தது காவல்துறை.
பெண் மருத்துவர் மரணம் தொடர்பாக பல்வேறு பிரபலங்கள், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும், தூக்கிலிட வேண்டும் என்று கருத்துகள் தெரிவித்து வந்தார்கள். ஆனால், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார்.
இதனிடையே, இன்று (டிசம்பர் 6) அதிகாலை குற்றவாளிகள் நால்வரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும், ஹைதராபாத் காவல்துறையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக சமந்தா தனது ட்விட்டர் பதிவில், "நான் தெலங்கானாவை நேசிக்கிறேன். பயம் ஒரு மிகப்பெரிய தீர்வு. சில நேரங்களில் அது மட்டுமே தீர்வு” என்று தெரிவித்தார். இந்த ட்வீட்டுக்கு பலரும் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினார்கள்.
உடனே சமந்தா தனது ட்விட்டர் பதிவில், "இந்தச் சம்பவம் நடக்கும்போது நான் அதைப் பற்றி எதுவும் பேசவில்லை. ஏன் என்றால், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு நான் அனுதாபங்கள் தெரிவிக்கவில்லை என்று என்னைக் குற்றம் சாட்டி வந்த ஒவ்வொரு செய்தியும், என் சமூகத்தில் பெண்களுக்காக நான் எவ்வளவு குறைவான உதவிகளைச் செய்திருக்கிறேன் என்று ஞாபகப்படுத்தின. ஒரு ட்வீட் அந்தக் குற்ற உணர்ச்சியிலிருந்து எனக்கு விடுதலை தராது" என்று தெரிவித்துள்ளார்.