'சந்திரமுகி உங்களின் படம்' என ரஜினி என்னிடம் சொன்னார்; அவரின் நம்பிக்கை அப்போது புரிந்தது: ஜோதிகா

ஜோதிகா - ரஜினி: கோப்புப்படம்
ஜோதிகா - ரஜினி: கோப்புப்படம்
Updated on
1 min read

கார்த்தி நல்ல கதைகளை தேர்ந்தெடுப்பது தனக்கு பெருமையாக இருப்பதாக, நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.

கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கும் 'தம்பி' திரைப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்குகிறார். இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் இன்று (நவ.30) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜோதிகா பேசியதாவது:

"இந்த திரைப்படத்தில் எல்லா கலைஞர்களுக்கும் மரியாதை இருக்கிறது. அதில், கார்த்தி தலையிடவில்லை. படத்தில் எல்லா கலைஞர்களுக்கும் இடம் இருப்பதை கார்த்தி உறுதிப்படுத்தினார். கார்த்தி நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கிறார். அதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது.

இந்த நம்பிக்கையை நான் ரஜினியிடம் பார்த்திருக்கிறேன். 'சந்திரமுகி' படத்தின் போது, "ஜோதிகா இது உங்கள் படம். படத்தின் தலைப்பு 'சந்திரமுகி'. அதனால் இது உங்கள் படம்" என ரஜினி என்னிடம் கூறினார். அவரிடம் உள்ள நம்பிக்கையை அப்போது பார்த்தேன். அதே நம்பிக்கையை இப்போது கார்த்தியிடம் பார்க்கிறேன்.

'தம்பி' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கதாநாயகனுக்கு இணையாக எனக்கும் முக்கியத்துவம் தந்திருந்தனர். அதற்காக நன்றி. எவ்வளவு பெரிய கதாநாயகியாக இருந்தாலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அவர் இருக்க மாட்டார்.

எங்கள் வீட்டில் கார்த்தி, என்னை விட பெரிய நட்சத்திரம் சத்யராஜ் தான். 'கட்டப்பா'வுடன் நடிப்பது பெரிய அதிர்ஷ்டம் என என் பிள்ளைகளே என்னிடம் கூறினர்.

ஒரு திரைப்படத்தில் இரண்டு விஷயங்களை நான் கவனிப்பேன். ஒன்று, என்னுடைய கதாபாத்திரம் மற்றொன்று அது அறிவார்ந்த படமாக இருக்கிறதா என்று பார்ப்பேன்"

இவ்வாறு ஜோதிகா பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in