

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தர்பார்' படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார் ரஜினி. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 5-ம் தேதி நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு 'தர்பார்' வெளியாகவுள்ளது.
’தர்பார்’ படத்தைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்க ஆயத்தமாகி வருகிறது படக்குழு. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு இமான் இசையமைக்கவுள்ளார். மேலும், தனது படங்களின் வழக்கமான தொழில்நுட்பக் கலைஞர்களான ஒளிப்பதிவாளர் வெற்றி, எடிட்டர் ரூபன் ஆகியோரை இந்தப் படத்திலும் உபயோகப்படுத்த சிவா முடிவு செய்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தில் முதன்முறையாக ரஜினியுடன் சூரி நடிக்கவுள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனிடையே, இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் முதல் படமாக இது அமையவுள்ளது. இவரது அம்மா மேனகா ரஜினியுடன் 'நெற்றிக்கண்' என்னும் படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.