

'தளபதி 64' படத்துக்காக விஜய் வைத்த வேண்டுகோளால், விஜய் சேதுபதி மகிழ்ச்சியில் இருக்கிறார்.
அட்லீ இயக்கத்தில் வெளியாகியுள்ள 'பிகில்' படத்தின் வசூல் நிலவரங்களால் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார் விஜய். இந்தப் படம் வெளியாகும் முன்பே 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டார் விஜய். சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ், மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், விஜய் - விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இந்நிலையில் 'தளபதி 64' படக்குழுவினரிடம் விஜய் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். விஜய் சேதுபதி பல மொழிகளில் நடித்து வருகிறார். ''ஒரே சமயத்தில் பல படங்களில் கவனம் செலுத்தி சேது, பிஸியான நடிகராக இருக்கிறார். நான் ஒரு படம் முடித்தவுடன்தான் அடுத்த படம் என்று திட்டமிட்டு நடித்து வருகிறேன். இதனால் விஜய் சேதுபதியுடன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் முதலில் எடுத்துவிடுங்கள். அதற்குப் பிறகு மீதமுள்ள காட்சிகளை ஷூட் பண்ணலாம். ஒரே கட்டமாக அவருடைய காட்சிகளை முடித்துவிட்டு, எடிட்டிங் முடிந்தால் என்னவெல்லாம் மீதமுள்ளதோ அதெல்லாம் கடைசியாக எடுத்துக் கொள்ளலாம்’’ என்று கூறியுள்ளார் விஜய்.
விஜய்யின் இந்த வேண்டுகோள் குறித்து படக்குழுவினர் விஜய் சேதுபதியிடம் தெரிவித்துள்ளனர். அவரோ மிகவும் நெகிழ்ந்து போய்விட்டாராம். நம் மீது இவ்வளவு மரியாதை வைத்துள்ளாரே என்று விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார். இதனால் அடுத்தகட்டப் படப்பிடிப்பிலிருந்து விஜய் - விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.
'தளபதி 64' படத்தின் இயக்குநர் தேர்வில் எப்படி ஆச்சர்யப்படுத்தினாரோ, அதைப் போலவே 'தளபதி 65' படத்தின் இயக்குநர் பெயரும் வெளியே வரும்போது அனைவரும் ஆச்சர்யப்படுவீர்கள் என்று இப்போதே ட்விஸ்ட் வைக்கிறது விஜய் வட்டாரம்.