

தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தைத் தவிர்த்து, சுஜித்தின் பெற்றோருக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித் இன்று (அக்.29) சடலமாக மீட்கப்பட்டான். மீட்கப்பட்ட குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு சவப்பெட்டியில் வைத்து சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சுஜித்தின் மரணத்தால் இன்று (அக்டோபர் 29) தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை ராகவா லாரன்ஸ் தவிர்த்துள்ளார். மேலும், சுஜித் மீண்டும் வருவான் என்று அவரது பெற்றோருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் ராகவா லாரன்ஸ்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "ஒட்டுமொத்த தேசத்தின் கண்களையும் குளமாக்கி விட்டுச் சென்று விட்டான் சுஜித். அவனை அரவணைக்கத் தவறிய காலமும் இங்குள்ள சூழலும் வேதனைக்குரியது.
இந்நிலையில் சுஜித்தின் பெற்றோருக்குச் சொல்ல விரும்புவது, சுஜித் இன்று நம் தேசத்தின் பிள்ளையாகி விட்டான். அதுபோல் இந்தத் தேசமெங்கும் எத்தனையோ பிள்ளைகள் பெற்றோரின்றி இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பிள்ளையை எடுத்து அந்த பிள்ளைக்கு சுஜித் எனப்பெயரிட்டு வளர்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
அதன் மூலம் ஒரு குழந்தைக்கு நீங்கள் வாழ்க்கை கொடுத்ததாகவும் இருக்கும், சுஜித்தின் ஆத்மா சாந்தியடையும், சுஜித்தும் தங்களுடனே இருப்பான். அப்படி நீங்கள் குழந்தையைத் தத்தெடுக்க நினைத்தால் நானே குழந்தையைத் தத்தெடுத்துக் கொடுக்கிறேன். அவன் படிப்பு செலவு முழுவதையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்” என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.