

மிகவும் வேதனையான ஒரு நிகழ்வு என்று குழந்தை சுஜித் தொடர்பாக சத்யராஜ் வெளியிட்ட வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.
திருச்சி, மணப்பாறை நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் 2 வயது குழந்தை சுஜித், ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து 50 மணி நேரத்தைக் கடந்துள்ளது. அவரை பத்திரமாக மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
தமிழகத்தைச் சேர்ந்த பிரபலங்கள், பொது மக்கள், இணையவாசிகள் என அனைவருமே சுஜித் நலமுடன் திரும்பப் பிரார்த்தனை செய்து வருவதாகத் தெரிவித்து வருகிறார்கள். தொடர்ச்சியாக #PrayforSurjith, #PrayforSujith, #PrayforSurjit ஆகிய ஹேஷ்டேக்குகளில் பலரும் சுஜித் நலமுடன் திரும்ப தங்களுடையக் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், குழந்தை சுஜித் தொடர்பாக நடிகர் சத்யராஜ் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "வணக்கம். 2 வயது குழந்தை சுஜித் நிச்சயமாக மீட்கப்படும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். மிகவும் வேதனையான ஒரு நிகழ்வு. நிச்சயமாக அந்தக் குழந்தை மீட்கப்பட வேண்டும். அந்த நல்ல செய்திக்காக அனைவருடனும் சேர்ந்து நானும் காத்திருக்கிறேன். நம்பிக்கையோடு" என்று தெரிவித்துள்ளார் சத்யராஜ்.