

கதை பிரச்சினை தொடங்கி தற்போது வரை 'பிகில்' விவகாரத்தில் என்ன நடந்தது என்று உதவி இயக்குநர் கே.வி.செல்வா தன் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிகில்'. தணிக்கையில் 'யு/ஏ' சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் அக்டோபர் 25-ம் தேதி வெளியாகவுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகவும், ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.
இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் உதவி இயக்குநர் கே.பி.செல்வா. 4 மாதங்களாக நடைபெற்று வந்த வழக்கு, காப்புரிமை தொடர்பானது என்பதால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்து, வழக்கை வாபஸ் பெற்றார். இதனையடுத்து அந்த வழக்கை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அக்டோபர் 14-ம் தேதி, உதவி இயக்குநர் கே.பி. செல்வா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அது அக்டோபர் 15-ம் தேதி நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையில் அட்லீ மற்றும் உதவி இயக்குநர் உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை அக்டோபர் 17-ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்நிலையில், உதவி இயக்குநர் கே.பி.செல்வா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
''ஒரு தயாரிப்பாளரிடம் கதையைக் கொடுத்துட்டு வந்ததுக்கு அப்புறம் அவங்ககிட்ட இருந்து ஒரு கால் வராதா, நம்ம வாழ்க்கை மாறாதான்னு யோசிக்கிற நிறைய உதவி இயக்குநர்கள்ல நானும் ஒருவன்.
போன தீபாவளிக்கு இந்த நேரம் எங்களுக்குள்ள இந்தக் கதை பிரச்சினை தொடங்குச்சு. உங்ககிட்ட நான் காசு கேட்டு வந்தனா இல்ல,எதுக்கு வந்தேன்னு உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. ஏன்னா நானும் உங்க ஆட்களும் பேசின விஷயங்கள் வாய்ஸ் ரெக்கார்ட் உங்ககிட்ட இருக்கு. ஒரு வேலை மறந்திருந்தா அதைக் கேளுங்க.
இது விஷயமாக ஜனவரி 2019 எழுத்தாளர் சங்கத்துல நான் புகார் கொடுத்தேன். அப்போ அவங்க ஷூட்டிங் கூட ஆரம்பிக்கல, அப்புறம் உண்மையாவே அந்த இயக்குநர் ஜூலை 2019-ல் கதை பதிவு பண்ணியிருந்தா ஏன் என்கிட்ட அதைப் பத்தி எழுத்தாளர் சங்கம் என்னோட புகாரை விசாரிக்கும் போதே இதைச் சொல்லல. எதுக்கு என்ன நீதிமன்றத்துக்கு போங்கன்னு எழுத்தாளர் சங்கம் சொல்லணும். இப்போது வரை அவங்கிட்ட இருந்து எந்த பதிலும் வரல.
நாங்க படத்தை தடை செய்யணும்னு ஒரு விதத்துலயும் நினைக்கல. எங்க நோக்கமும் அது இல்ல. காசுக்காக விளம்பரத்துக்காக வர்றான். இவ்ளோ பெரிய இயக்குநர பத்தி பேச இவனுக்கெல்லாம் என்ன தகுதி இருக்கு?ன்னு நிறைய பேர் சொல்றீங்க. என் உரிமையை எனக்கான அங்கீகாரத்தைக் கேக்கணும்னு நெனைச்சேன் கேட்டேன். அவ்ளோதான். இதுக்காக ஒவ்வொரு நாளும் அந்த இயக்குநர் ஆபீஸ் வாசல்ல நிற்கும்போது அவரோட ஆட்கள், செக்யூரிட்டி என்ன பாக்குற விதம் இருக்கே அந்த வலி யாருக்கும் புரியாது,
எங்க நோக்கம் இவ்ளோ கோடி முதலீடு பண்ண படத்தை தடை செய்றது இல்ல/ அந்த மாதிரி ஒரு கேவலமான எண்ணம் உள்ள ஆட்களும் நாங்க இல்ல. எனக்கு கடவுள் துணை இருக்காரு. நீங்க என்ன பத்தி பொய்யா பேசி உங்க தரத்தை நீங்களே குறைச்சிக்காதிங்க. எதிரிக்கும் மரியாதை கொடுங்க. அதனால உண்மையா நேர்மையா பேசுங்க. அதவிட்டுட்டு பணம் கேட்டான் அதைக் கேட்டான்னு சில்லற மாதிரி பேசாதீங்க.
படத்துல கூட வில்லன் கேரக்டர் இல்லன்னா, நல்ல ஹீரோவுக்கு வேலையும் இல்ல மதிப்பும் இல்ல. ஆகையால் உங்களுடைய பார்வையில் வில்லனாக இருப்பதற்கு சந்தோஷம். கடைசியாக நான் உங்களை ஜெயிக்கல. ஆனா உங்களுக்கு நிகரா சண்ட செஞ்சேன். அது போதும் நிறைய கத்துக்கிட்டேன். எக்கச்சக்க அனுபவம் இந்த ஒரு வருஷத்துல. இது நீங்க சொல்ற காசை விட பெருசு. அனைத்துக்கும் நன்றி''.
இவ்வாறு கே.பி.செல்வா தெரிவித்துள்ளார்.