

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'கோமாளி' படத்தின் வசூல் 50 கோடியைத் தாண்டியிருப்பதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கோமாளி'. வேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தைச் சக்தி பிலிம் பேக்டரி வெளியிட்டது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. படம் வெளியாகி இன்றுடன் (செப்டம்பர் 27) 50 நாட்கள் ஆகிறது. இப்போது வரையிலும் சில திரையரங்குகளில் இந்தப் படம் திரையிடப்பட்டு வருகிறது.
படம் வெளியானதிலிருந்தே நல்ல வசூல் செய்து வரும் இந்தப் படம், தற்போது மொத்த வசூலில் 50 கோடியைத் தாண்டி விட்டதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 50 கோடியைத் தாண்டிய வசூல் என்பது ஜெயம் ரவியின் படங்களுக்குப் பெரிய விஷயமாகும். அவருடைய படங்களுள் 'தனி ஒருவன்' படத்துக்குப் பிறகு இந்தப் படம் தான் மாபெரும் வெற்றியைக் கொடுத்துள்ளது.
'தனி ஒருவன்' படமும் இதர மொழி ரீமேக் உரிமையைப் போட்டிப் போட்டுக் கொண்டு கைப்பற்றினார்கள். அதே வகையில் 'கோமாளி' படத்தின் இதர மொழி உரிமைகளை ஒட்டுமொத்தமாக போனி கபூர் கைப்பற்றியுள்ளார். இதன் இந்தி ரீமேக்கில் அர்ஜுன் கபூர் நடிப்பது உறுதியாகியுள்ளது.
'கோமாளி' படத்தைத் தொடர்ந்து லட்சுமண் இயக்கத்தில் உருவாகும் படத்திலும், அஹ்மத் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் ஜெயம் ரவி