

சிவகார்த்திகேயன் தலையிட்டுப் பேச்சுவார்த்தை நடத்தியதால், ரவிக்குமார் படத்தின் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
'சீமராஜா' படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்க, 'இன்று நேற்று நாளை' இயக்குநர் ரவிக்குமார் இயக்கி வந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வந்தார்.
ஆர்.டி.ராஜா தயாரித்த முந்தைய படங்களின் தோல்வியால், ரவிக்குமார் படத்தைத் தொடர அவரால் பணம் தயார் செய்ய முடியவில்லை. இதனால் படப்பிடிப்பு தடைப்பட்டது. பல்வேறு மொழிகளில் தயாரிப்பு, சயின்ஸ் பிக்ஷன் படம் என்பதால் அதிகமான கிராபிக்ஸ் காட்சிகள் என்பதால் அதிகமான காட்சிகள் எனப் பெரிய முதலீடு தேவைப்பட்டது.
இந்தப் படத்தின் பிரச்சினை முற்றுப் பெறாததால், ’மிஸ்டர் லோக்கல்’, 'ஹீரோ', ''நம்ம வீட்டுப் பிள்ளை' எனக் கவனம் செலுத்தத் தொடங்கினார். தற்போது ஆர்.டி.ராஜா தனக்கு நெருங்கிய நண்பர் என்பதால் இந்தப் படத்தின் பிரச்சினையைத் தீர்க்க பைனான்ஸியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இதில் ஆர்.டி.ராஜாவின் நிலையை எடுத்துச் சொல்லி, சுமுக முடிவு எட்ட உதவியுள்ளார் சிவகார்த்திகேயன். இதனால் இந்தப் படத்தின் மீதான பிரச்சினைகள் முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. இதன் அடுத்த கட்டப் படப்பிடிப்பு நவம்பரில் முடிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளது படக்குழு.
அதற்கு முன்னதாக 'ஹீரோ' படத்தின் பணிகளை முடிக்கத் தீர்மானித்துள்ளார் சிவகார்த்திகேயன். ரவிக்குமார் படத்தை முடித்துவிட்டு, நெல்சன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார்.