Published : 18 Sep 2019 02:23 PM
Last Updated : 18 Sep 2019 02:23 PM

பா.இரஞ்சித் இயக்கும் ‘சல்பேட்டா பரம்பரை’?

பா.இரஞ்சித் இயக்கவுள்ள படத்துக்கு ‘சல்பேட்டா பரம்பரை’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் இயக்குநரான பா.இரஞ்சித், தொடர்ந்து ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ மற்றும் ‘காலா’ படங்களை இயக்கியுள்ளார். இதில், கடைசி இரண்டு படங்கள் ரஜினியை வைத்து இயக்கினார். தமிழ் சினிமாவின் உச்ச நடிகரை வைத்து அடுத்தடுத்து படங்களை இயக்கியது ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது.

‘காலா’ படத்தைத் தொடர்ந்து பழங்குடியினத் தலைவரான பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் முயற்சியில் இறங்கினார் பா.இரஞ்சித். நமா பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதன் முன்தயாரிப்புப் பணிகளில் பா.இரஞ்சித் தீவிரமாக ஈடுபட்ட நிலையில், தற்காலிகமாக இந்தப் படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

எனவே, ஏற்கெனவே எழுதி வைத்திருந்த கதையைக்கொண்டு தமிழ்ப்படம் ஒன்றை இயக்கப் போகிறார் பா.இரஞ்சித். குத்துச்சண்டையை மையமாகக் கொண்ட இந்தப் படம், வடசென்னையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில், ஹீரோவாக ஆர்யா நடிக்கிறார். அவருடன் சத்யராஜ், கலையரசன் மற்றும் தினேஷ் ஆகியோரும் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘குரங்கு பொம்மை’ படத்தைத் தயாரித்த ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இந்நிலையில், இந்தப் படத்துக்கு ‘சல்பேட்டா பரம்பரை’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதான் முதல் படமாக இயக்க வேண்டும் என பா.இரஞ்சித் எழுதி வைத்திருந்த கதை. ஆனால், முதல் படமாக இதை எடுக்க வேண்டாம் என பல தயாரிப்பாளர்கள் அறிவுறுத்தியதால், அதன்பிறகே ‘அட்டகத்தி’ கதையை இயக்கினார்.

மேலும், தன்னுடைய நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ‘பரியேறும் பெருமாள்’ படத்தைத் தயாரித்த பா.இரஞ்சித், தற்போது ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என்ற படத்தையும் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என் வாழ்க்கையை மாற்றிய படம்: பிரியதர்ஷினி ராஜ்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x