

'ஜாக்சன் துரை' படத்துக்குப் பிறகு சத்யராஜ், சிபிராஜ் இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'சத்யா' வெற்றிக்குப் பின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, நாயகன் சிபிராஜ், இசையமைப்பாளர் சைமன் கே கிங் கூட்டணி மீண்டும் இந்தப் படத்தில் இணைகிறது. மேலும் இதில் சத்யராஜ் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில், நாசர் பத்திரிகையாளர் வேடத்திலும் நடிக்கின்றனர்.
கன்னட மொழியில் புனீத் ராஜ்குமார் தயாரிப்பில் உருவான 'கவலுதாரி' என்ற த்ரில்லர் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் இது. தமிழில் இந்தப் படத்தை தனஞ்ஜயன், லலிதா தனஞ்ஜயன் தயாரிக்கின்றனர். ஜான் மகேந்திரன் தமிழ் வசனம் எழுதுகிறார்.
'கவலுதாரி' படத்தின் இயக்குநர் ஹேமந்த் ராவ், தனது ட்விட்டர் பக்கத்தில், "கவலுதாரி தமிழில் ரீமேக் செய்யப்படுவது எனக்கும், படத்தின் ஒட்டுமொத்த குழுவுக்கும் மிகப்பெரிய பெருமை" என்று பகிர்ந்துள்ளார்.
நவம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்கி, ஒரே கட்டமாக ஜனவரி 2020ல் படத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்தப் படம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் டாக்டர் ராஜசேகர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகையர் பற்றிய விபரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.