

'நேர்கொண்ட பார்வை' பார்த்துவிட்டு, அதில் நடித்த அஜித்துக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினி.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பிங்க்' படத்தின் ரீமேக்காகும். போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியானது.
இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் மொத்த வசூல் சுமார் ரூ.45 கோடியைத் தாண்டியுள்ளது. நேற்று (ஆகஸ்ட் 12) இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அஜித் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் இருவருக்கும் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினி.
'ரொம்ப நல்ல படம். சரியாக ரீமேக் பண்ணியிருக்கீங்க. hats off' என்று ரஜினி தெரிவித்ததாக படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். ரஜினியின் பாராட்டால் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தற்போது அஜித்தின் அடுத்த படத்துக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார் இயக்குநர் ஹெச்.வினோத். இதன் படப்பூஜை ஆகஸ்ட் 29-ம் தேதி நடைபெறும் எனத் தகவல் வெளியாகவுள்ளது.