Published : 20 Jul 2019 10:26 AM
Last Updated : 20 Jul 2019 10:26 AM

அனைத்து தரப்பின் கருத்துகளையும் கேட்டு புதிய கல்விக் கொள்கையில் மத்திய அரசு திருத்தங்கள் கொண்டு வர வேண்டும்: சூர்யா வேண்டுகோள்

அனைத்து தரப்பின் கருத்துகளையும் கேட்டு புதிய கல்விக் கொள்கையில் மத்திய அரசு திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற அகரம் அறக்கட்டளையின் 40-வது ஆண்டுவிழாவில் பேசிய நடிகர் சூர்யா, தேசியக் கல்விக் கொள்கையின் புதிய திட்டங்கள் 3 வயதிலே மும்மொழிக் கல்வியைத் திணிப்பதாகவும் ஆசிரியரே இல்லாமல் நீட் தேர்வு எழுதுவது எப்படி என்றும் விமர்சித்திருந்தார். 

30 கோடி மாணவர்களின் எதிர்காலம் தேசியக் கல்விக் கொள்கையில் உள்ளது. இதில் எதற்கு அவசரம்? பரிந்துரைகளை அளிக்க ஒரு மாத கால அவகாசம் மட்டும் அளித்தது ஏன்? நாம் அத்தனை பேரும் ஏன் வரைவு அறிக்கை குறித்துப் பேசவில்லை? என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தப் பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பின. அமைச்சர் ஜெயக்குமார் சூர்யாவுக்கு விமர்சிக்க உரிமை உண்டு என்று தெரிவித்தார். விமர்சனம் செய்யும் சூர்யாவின் கருத்துக்கு எதிர் விமர்சனம் செய்ய மற்றவர்களுக்கு உரிமை உண்டு என கடம்பூர் ராஜு தெரிவித்திருந்தார். சூர்யாவின் பேச்சு பல்வேறு விவாதங்களை உண்டாக்கியது. 

இந்நிலையில் சூர்யா மீண்டும் நீட் தேர்வு மற்றும் தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் 2 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

''கல்வி என்பது ஒரு சமூக அறம், 'பணம் இருந்தால் விளையாடு' என்று சொல்கிற சூதாட்டமாக அது மாறக்கூடாது. நம் நாட்டில் கல்வியானது, ஏழைகளுக்கு ஒன்றாகவும், வசதி படைத்தவர்களுக்கு ஒன்றாகவும் இருக்கிறது என்பதை உணர புள்ளி விவரங்கள் தேவையில்லை. மனசாட்சியே போதுமானது. அப்படிப்பட்ட மனசாட்டி தான். 'அனைவருக்கும் சமமான தேர்வு வைப்பதைவிட ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து குழந்தைகளுக்கும் சமமான, தரமான இலவசக் கல்வியை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு' என்று வலியுறுத்துகிறது.

இதுவரை அகரம் ஃபவுண்டேஷன் மூலமாக சுமார் 3,000 மாணவர்கள் உயர்கல்வி படிக்கிற வாய்ப்பை பெற்று இருக்கின்றனர். அவர்களில் 1,169 பேர் பொறியாளர்கள், 1,234 பேர் கலை அறிவியல் பட்டதாரிகள், 54 பேர் மருத்துவர்கள், 285 பேர் பாரா மெடிக்கல் படிப்புகளுக்கும், 167 டிப்ளமோ படிப்புகளுக்கும் வாய்ப்பு பெற்று இருக்கிறார்கள். இப்படி படித்தவர்களில் 90% பேர் முதல் தலைமுறைப் பட்டதாரிகள், 'ஐ.டி.ஐ' டிப்ளமோ முதல் 'ஐ.ஐ.டி'யில் ஆராய்ச்சி வரை பல்வேறு நிலைகளில் சிறந்து விளங்குகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான அகரம் தன்னார்வலர்கள் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று, மாணவர்களின் குடும்பச் சூழலையும், கல்விச் சூழலையும் ஆய்வு செய்து பகிரும் அனுபவங்களைக் கேட்டு கண்கள் கலங்கிப் போகும்.

பெற்றோரை இழந்த நிலையில், கல்வி ஒன்றையே தன் வாழ்க்கையாக கருதி நல்ல மதிப்பெண் எடுத்த ஒரு மாணவி, விண்ணப்பம் வாங்கக்கூட முடியாமல் தவித்தார். இன்று அவர் மருத்துவம் முடித்து இந்திய ராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றுகிறார். கல் உடைக்கிற தொழிலாளியின் மகள், சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்து மருத்துவ மேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார். ஆடு மேய்க்கிற பெற்றோரின் மகன், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்து டாக்டராகி, விருப்பத்துடன் கிராமப்புறங்களில் பணியாற்றுகிறார். ’நீட்’ தேர்வு இருந்திருந்தால் இவர்கள் யாரும் மருத்துவர்களாகி இருக்க முடியாது. அரசுப் பள்ளியில் படித்து மருத்துவர்களான மாணவர்கள் தகுதியிலும், தரத்திலும் சிறந்தே விளங்குகின்றனர். நீட் அறிமுகமான பிறகு, அகரம் மூலமாக அரசுப் பள்ளியில் படித்த ஒரேயோரு மாணவரைக் கூட மருத்துவக் கல்லூரியில் சேர்க்க முடியவில்லை. புதிய கல்வி கொள்கையில் எல்லாவிதமான பட்ட படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வுக்கான பரிந்துரை இருப்பது அச்சமூட்டுகிறது. உயர்கல்வியில் இருந்து கிராமப்புற மாணவர்களை நுழைவு தேர்வுகள் துடைத்து எறிந்துவிடும்.

பெருநகரங்களின் கண்கள் கூசும் வெளிச்சத்தின் நிழல்கூட படியாத மின்சாரமற்ற வீடுகளில் வாழ்ந்து, தெருவிளக்கின் வெளிச்சத்தில் படிக்கிற மாணவர்களின் தடைகளையும் வலிகளையும் 'கள அனுபவம்' மூலமாக அறிந்திருக்கிறோம். அவர்களின் வறுமைச் சூழல், எங்களைக் கூசி குறுகச் செய்திருக்கிறது. இத்தகைய மாணவர்களின் எதிர்கால நலனைத் தீர்மானிக்கிற தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை மீது நாம் போதிய கவனம் செலுத்தாமல் இருப்பதை எண்ணிக் கவலையாக இருந்தது. இம்மாணவர்களை மனதில் நிறுத்தி, இந்தக் கல்விக் கொள்கையை அணுக வேண்டிய தேவை அனைவருக்கும் இருக்கிறது. ஏழை கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிற கல்விக் கொள்கையில் சமூகத்தின் அனைத்து தரப்பினரின் பங்கேற்பையும் உறுதி செய்யவே, கல்வியாளர்களுடன் பத்திரிகையாளர்களை சந்தித்து வேண்டுகோள் வைத்தோம். அதற்கு கிடைத்த வரவேற்பு எங்களைச் நெகிழச் செய்தது.

'கல்வியைப் பற்றி பேச உனக்கு தகுதி இருக்கிறது?' என்று எதிர் கருத்துகள் வந்தபோது, ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் நலன் மீது அக்கறை கொண்டு என் கருத்துகளை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவு கல்விப் பணியில் தொடர்ந்து இயங்கும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள், கல்விக் கொள்கை பற்றிய விவாதத்தை முன்னெடுத்த பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

சமமான வாய்ப்பும், தரமான கல்வியும் மறுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்களின் நிலை உணர்ந்த ஒரு குடிமகனாக சக மனிதனாகவே என்னுடைய கேள்விகளை முன்வைக்கிறேன். தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை குறித்து, நாட்டின் வளர்ச்சியிலும், மாணவர்களின் நலனிலும் அக்கறை கொண்ட கல்வியாளர்களுடன் உரையாடி தெளிவைப் பெறுவோம்.

இந்த வரைவு அறிக்கை மீதான ஆக்கப்பூர்வமான கருத்துகளை கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர் அமைப்புகள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் https://innovate.mygov.in/new-education-policy-2019/ இணையதளத்தில், இம்மாத இறுதிக்குள் பதிவு செய்யும்படி வேண்டிக் கொள்கிறேன். மத்திய அரசும் அனைத்து தரப்பின் கருத்துகளையும் கேட்டறிந்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுகோள் வைக்கிறேன். ஏழை மாணவர்களுக்குக் கல்வியே உயரப் பறப்பதற்கான சிறகு. அது முறிந்து போகாமல் இருக்க அனைவரும் துணை நிற்போம்''.

இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x