

'விஸ்வரூபம் 2' படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் இருந்து திரும்ப பெற்று, மீண்டும் தனது நிறுவனம் மூலமாக வெளியிட கமல் திட்டமிட்டு இருக்கிறார்.
'விஸ்வரூபம்' வெளியான உடனே, 'விஸ்வரூபம் 2' படத்தில் எடுக்க வேண்டிய காட்சிகளுக்கு படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது 'விஸ்வரூபம் 2' படத்தின் உரிமையை வாங்கினார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.
'விஸ்வரூபம் 2' படத்திற்கான பணிகளை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தாமதப்படுத்தியதால், 'உத்தம வில்லன்', 'பாபநாசம்' ஆகிய படங்களில் தொடர்ச்சியாக கமல் நடித்து வந்தார். 'உத்தம வில்லன்' வெளியாகிவிட்டது, 'பாபநாசம்' படத்தை ஜூலையில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். தற்போது தனது இணை இயக்குநர் ராஜேஷ் இயக்கி வரும் 'தூங்காவனம்' படத்தில் நடித்து வருகிறார் கமல்.
இனிமேலும் 'விஸ்வரூபம் 2' படம் வெளியாகாமல் இருந்தால், படம் மிகவும் பழைய படம் போல் ஆகிவிடும். ஆகையால், இனியும் தாமதிக்காமல் தனது ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் இருந்து உரிமையை திரும்ப பெற்று தனது ராஜ்கமல் நிறுவனம் மூலமாகவே 'விஸ்வரூபம் 2' படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறாராம் கமல்.
இதற்கான பணிகள் 'தூங்காவனம்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார் கமல். விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.