ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை ‘4 இடியட்ஸ்’
அறிமுக இயக்குநர் சஜோ சுந்தர் முருகேசன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம், ‘4 இடியட்ஸ்’. இதில் புகழ், பிரக்யா நயன், திடியன், இந்திரன், ரவி மரியா, வின்சென்ட் அசோகன், ‘கும்கி’ அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
யு.கே.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்துக்கு சுபாஷ் முனி ரத்தினம் இசையமைத்துள்ளார். அன்பே சிவம், புதுப்பேட்டை, கோகுலத்தில் சீதை, உன்னை நினைத்து உள்பட பல படங்களைத் தயாரித்த லக் ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், அதன் நிறுவனர்கள் கே.முரளிதரன், சுவாமி நாதன் ஆகியோர் மறைவுக்குப்பின் படத் தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்தது
தற்போது கே. முரளிதரனின் மகன்களான எம். கோகுல் கிருஷ்ணன், டாக்டர் வத்ஸன் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் பற்றி இயக்குநர் சஜோ சுந்தர் முருகேசன் கூறும்போது, “இயக்குநர் ஹரி, பிரகாஷ் ராஜ் இயக்கிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றி இருக்கிறேன்.
இது என் முதல் படம். டார்க் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். புத்திசாலித்தனமாகச் செயல்படுகிறோம் என நினைத்து முட்டாள்தனமாக நடந்துகொள்ளும் 4 பேரின் கதை இது. ஒரு வீட்டுக்குக் கொள்ளையடிக்க செல்லும் அவர்கள் அங்கு சிக்கிக் கொள்கிறார்கள். அங்கிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பது படம்.
ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதை என்றாலும் அடுத்தது என்ன என்பதை யாரும் யூகிக்க முடியாதபடி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. பொழுதுபோக்குடன் மெசேஜும் படத்தில் இருக்கிறது. கொண்டாட்ட மனநிலையில் இருந்து சினிமா இப்போது சீரியஸ் தன்மைக்குச் சென்றிருக்கிறது. அதை மாற்றும் விதமாக இப்படம் இருக்கும். பார்வையாளர்கள் கவலையை மறந்து ரசிக்கும்படி இருக்கும். ரிலீஸுக்கான வேலைகள் நடந்து வருகின்றன” என்றார்.
