

க்யூப் மற்றும் யுஎஃப்ஓ நிறுவனங்களுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தமிழ்த் திரையுலகினர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
க்யூப் மற்றும் யுஎஃப்ஓ நிறுவனங்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய சேவை வரியை தாங்கள் செலுத்துவதாக கூறி தயாரிப்பாளர்களிடமிருந்து பணம் வசூலிக்கின்றனர். ஆனால், அந்த தொகையை அவர்கள் அரசுக்கு செலுத்துகிறார் களா என்று தெரியவில்லை. மேலும் படங்களை திரையிடும்போது தயாரிப்பாளர்களின் அனுமதி பெறாமல் விளம்பரங்களை வெளியிடுகின்றனர். இதிலிருந்து தயாரிப்பாளர்களுக்கு ஒரு சிறு தொகைகூட கிடைப்பதில்லை.
மேலும் திரைப்படங்களை வெளியிடும்போது, அதற்கான கட்டணமாக பெரும் தொகையை வசூலிக்கின்றனர். தங்களது நிறுவனங்கள் மட்டுமே தொழில் செய்ய வேண்டுமென்ற தனி நபர் ஆதிக்கத்தை உருவாக்கி தயாரிப்பாளர்களின் உரிமைகளை அவர்கள் முடக்கி வருகிறார்கள். இந்த நிறுவனங்களின் செயல்பாடு களை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் விதமாக அமைதி ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தோம்.
ஆனால், போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டதால் இந்த ஊர் வலத்தை மே முதல் வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளோம். இந்த போராட்டத்துக்கு தென் னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
க்யூப் நிறுவனம் விளக்கம்
திரைப்பட தயாரிப்பாளர்கள் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து க்யூப் நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கம் வருமாறு:
திரையரங்க விளம்பர உரிமை என்பது திரையரங்குகளையே சார்ந்தது. அந்த உரிமையை நாங்கள் முறைப்படி பெற்றுள்ளோம். இந்த விளம்பர உரிமைகளைப் பொறுத்தவரை மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் எவ்வாறு இயங்குகின்றனவோ அவ்வாறே நாங்களும் இயங்குகிறோம். மேலும் சேவை வரியினையும் நாங்கள் முறையாக அரசுக்குச் செலுத்தி வருகிறோம்.
திரைப்படத் தயாரிப்பாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க திரைப்பட டிஜிட்டல் மாஸ்டரிங் சேவையை நாங்கள் இலவசமாகவே செய்து வருகிறோம். திரையரங்குகளில் படம் வெளியாகும்போது மட்டுமே எங்களின் விலை பட்டியலின்படி (டிஜிட்டல் பிரிண்ட் மதிப்பு) ரூ.2,275 முதல் ரூ.27,500 (வரி தவிர்த்து) வரை செலுத்தி விநியோகஸ்தர்கள் வெளியிடுகின்றனர்.
மேலும் விநியோகஸ்தர்களின் வசதிக்காக, படம் திரையிடப்படும் காட்சி, வாரம், மொத்த உரிமை என்ற முறைகளையும் வைத்துள்ளோம். அதன்படி விநியோகஸ்தர்கள் தங்களுக்குத் தேவையான முறையை தேர்வு செய்து கொள்கின்றனர். க்யூப் தொழில்நுட்பம் மூலம் அதிகம் பயன் பெற்றவர்கள் தயாரிப்பாளர்களும், திரைத்துறையினரும்தான்.