லிங்கா பட விவகாரம்: காவல் ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவு

லிங்கா பட விவகாரம்: காவல் ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மெரினா பிக்சர்ஸ் நிறுவன நிர்வாகப் பங்குதாரர் சிங்காரவேலன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ திரைப்படத்தை திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் விநியோகிக்கும் உரிமத்தை எங்கள் நிறுவனம் பெற்றது.

இதற்காக, திரையங்க உரிமையாளர்களிடம் இருந்து ரூ. 8 கோடி வாங்கியிருந்தோம். ஆனால், இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் எங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய வேண்டுமென படத்தயாரிப்பாளரிடம் கோரினோம். அவர்களிடம் இருந்து பதில் இல்லை. நடிகர் ரஜினிகாந்தை தொடர்பு கொண்டும் பலனில்லை.

எனவே, நஷ்டத்தை ஈடுசெய்ய வலியுறுத்தி 10-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி கோரினோம். அவர்கள் அனுமதி அளிக்கவில்லை. எனவே, இப்போராட்டத்துக்கு அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

உயர்நீதிமன்ற நீதிபதி டி.சிவஞானம் இந்த மனுவை விசாரித்து, மனுதாரர் தரப்பில் நடத்தவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணையை 7-ம் தேதிக்கு (இன்று) தள்ளிவைத்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in