கலையுலகின் ஈடற்ற படைப்பாளி கே. பாலசந்தர்: வைகோ புகழஞ்சலி

கலையுலகின் ஈடற்ற படைப்பாளி கே. பாலசந்தர்: வைகோ புகழஞ்சலி
Updated on
1 min read

இயக்குநர் சிகரம்' என்று அழைக்கப்படும் கே.பாலசந்தரின் உடலுக்கு தலைவர்கள், திரைக்கலைஞர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கே.பாலசந்தர் மறைவிற்கு மதிமுக பொது செயலாளர் வைகோ விடுத்துள்ள இரங்கல் செய்தியில்:

”தமிழக கலை உலகத்தின் ஈடற்ற படைப்பாளியான இயக்குநர் சிகரம் பாலசந்தர் மறைந்தார்! என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், அளவற்ற துக்கமும் அடைந்தேன். அவரது புதல்வர் மறைந்த துக்கம் கேட்க அவரது இல்லம் சென்றபோது, அவருடன் மூன்று மணிநேரம் உரையாடிக் கொண்டிருந்தேன். நாடகத்துறையில் அவர் படைத்த நாடகங்களும், வெள்ளித்திரையில் அவர் உருவாக்கிய அமரகாவியங்களும் என் மனதை முழுமையாக ஈர்த்ததைப்பற்றி சொன்னேன்.

அவர் தந்த ’அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, சிந்து பைரவி, தண்ணீர் தண்ணீர், நீர்க்குமிழி, மேஜர் சந்திரகாந்த், வறுமையின் நிறம் சிவப்பு, எதிர்நீச்சல், இருகோடுகள், வானமே எல்லை’ இவற்றைக் குறிப்பிட்டபோது, இருகோடுகளில் அவர் சித்தரித்த அறிஞர் அண்ணா, புற்றுநோயால் மிகவும் உடல் நலம் குன்றியபோதும்கூட தனது விருப்பத்தை அறிந்து எதிர்நீச்சல் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய பண்பாட்டைக் கூறினார்.

இன்றைய சமூகத்தைப் பற்றி மிகவும் கவலைப்பட்டார். அவர் மறைந்தாலும் அவரது படைப்புகள் காலத்தைக் கடந்து வாழும். அவரை இழந்து கண்ணீரில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கிறேன்.” என்று தெரிவித்திருக்கிறார்,

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in