ரவிக்குமார் படத்தைத் தயாரிக்கிறாரா சிவகார்த்திகேயன்?

ரவிக்குமார் படத்தைத் தயாரிக்கிறாரா சிவகார்த்திகேயன்?
Updated on
1 min read

ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் சயின்ஸ் பிக்‌ஷன் படத்தை, சிவகார்த்திகேயனே தயாரிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

படத்தயாரிப்புகாக '24 ஏஎம்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார் ஆர்.டி.ராஜா. இதில், சிவகார்த்திகேயனை நாயகனாக வைத்து 'ரெமோ', 'வேலைக்காரன்' மற்றும் 'சீமராஜா' ஆகிய படங்களைத் தயாரித்தார். இந்தப் படங்களைத் தொடர்ந்து 'இன்று நேற்று நாளை' இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தையும் தயாரிக்கத் தொடங்கினார்.

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு, பானுப்ரியா, இஷா கோபிகர் உள்ளிட்ட பல நடித்து வந்தனர். இதன் படப்பிடிப்பு சில நாட்களுக்குப் பிறகு நிறுத்தப்பட்டது. ஏனென்றால், பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கியது 24 ஏஎம் நிறுவனம். இதனால், ரவிக்குமார் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதே தெரியாத நிலையில் உள்ளது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ரவிக்குமார் படத்தைத் தயாரிக்க பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளார். இதில் சுமூக முடிவு எட்டப்பட்டு, விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'ஹீரோ' படத்தையும் 24 ஏஎம் நிறுவனம், கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. ஆனால், தொடர் பைனான்ஸ் நெருக்கடிகளால் அதிலிருந்தும் விலகியது.

மேலும், 'அருவி' இயக்குநர் அருண்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தையும் முதலில் 24 ஏஎம் நிறுவனம்தான் தொடங்கியது. ஆனால், பைனான்ஸ் பிரச்சினை ஏற்பட்டதால், அப்படத்தை சிவகார்த்திகேயன் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in