விமல் நடித்த களவாணி 2 படத்தை வெளியிட இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

விமல் நடித்த களவாணி 2 படத்தை வெளியிட இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

ஒப்பந்தப்படி பணத்தை ஒப்படைக்காததால் இணை தயாரிப்பாளர் தொடர்ந்த வழக்கில் நடிகர் விமல் நடித்த 'களவாணி 2' திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சற்குணம் இயக்கி, தயாரித்துள்ள படம் 'களவாணி 2'.  இப்படத்தில் நடிகர் விமல் நடித்துள்ளார். 'களவாணி' படம் வெற்றி அடைந்த நிலையில் 'களவாணி 2' ஜூலை 5 அன்று வெளியாகவிருந்தது. இந்நிலையில் படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவரது மனுவில், ’’ 'களவாணி திரைப்படத்தின் இயக்குநர் சற்குணம் தன்னிடம் ரூ.67 லட்சத்து 38 ஆயிரம் வாங்கியதாகவும், இத்தொகைக்கு 20 சதவீத வட்டியும், லாபத்தில் 20 சதவீத பங்கும் வழங்குவதாக ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் சற்குணம் கையெழுத்திட்டார். ஒப்பந்தப்படி, திரைப்படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பு பணத்தை அவர் திருப்பித் தரவேண்டும்.

ஆனால், பணத்தைத் தராமல் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். எனவே பணத்தை திருப்பித் தரும்வரை படத்தை வெளியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும்'' என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 'களவாணி 2' படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

இதுகுறித்து  இயக்குநர் சற்குணம் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 10-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். ​

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in