

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் 'பார்ட்டி' படத்தின் படப்பிடிப்பு ஜூலை 20-ம் தேதி முதல் பிஜி தீவுகளில் தொடங்கப்படவுள்ளது.
'சென்னை 28' 2-ம் பாகத்தைத் தொடர்ந்து அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார் வெங்கட்பிரபு. 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வெங்கட்பிரபுவின் படம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் படப்பூஜை சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்புக்காக ஜூலை 15-ம் தேதி பிஜி தீவுகளுக்கு பயணப்படவுள்ளது படக்குழு. ஜூலை 20-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது. தொடர்ச்சியாக 52 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி மொத்த படத்தையும் முடிக்க திட்டமிட்டுள்ளார்கள்.
"படத்துக்குப் பூஜை போட்டா 'பார்ட்டி' வைப்பாங்க. ஆனால் முதல் முறையாக 'பார்ட்டி' படத்துக்கு பூஜை போட்டிருக்கிறோம்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.