

திரைப்படங்களில் விஷாலுடன் இணைந்து நடிப்பீர்களா என்ற கேள்விக்கு சரத்குமார் பதிலளித்துள்ளார்.
நடிகர் சங்கத் தேர்தலில் எதிரெதிர் அணியில் போட்டியிட்டவர்கள் விஷால் மற்றும் சரத்குமார். அத்தேர்தலில் விஷால் வெற்றி பெற்றார். நடிகர் சங்கத் தேர்தல் முடிந்தவுடன் இருவரும் அவ்வப்போது வார்த்தைப் போர் மட்டுமே நடத்தி வந்தார்கள். இருவரும் எந்தொரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் திரைப்படங்களில் விஷாலுடன் இணைந்து நடிப்பீர்களா என்ற கேள்விக்கு சரத்குமார், "தனிப்பட்ட முறையில் விஷாலுக்கு எதிராக எதுவும் இல்லை. ஆனால் கரும்புள்ளி போல ஒன்று உருவாகிவிட்டது. நான் ஏதோ பெரிய எதிரி போலவும், கொடுமைப்படுத்தியது போலவும், பெரிய தப்பு செய்தது போலவும் உருவாக்கப்பட்டுவிட்டது.
எங்கேயாவது பார்த்தால் பரஸ்பரம் வாழ்த்திக் கொள்வதில் பிரச்சினையில்லை. ஆனால் அவருடன் இணைந்து நடிப்பேனா என்று எனக்குத் தெரியாது. உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், நாளை வாய்ப்பு வந்தால், ஏன் செய்யக் கூடாது என்றெல்லாம் கேட்க மாட்டேன். ஏன் என்றுதான் கேட்பேன்" என்று தெரிவித்துள்ளார் சரத்குமார்.