

மக்களிடையே 'சரவணன் இருக்க பயமேன்' படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ரெஜினா, சிருஷ்டி டாங்கே, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் மே 12ம் தேதி வெளியான படம் 'சரவணன் இருக்க பயமேன்'. இமான் இசையமைத்த இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்து வெளியிட்டார்.
விமர்சன ரீதியாக போதிய வரவேற்பைப் பெறாவிட்டாலும், பி மற்றும் சி சென்டர்களில் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. படம் வெளியாகி 2 வாரங்கள் ஆகியுள்ள நிலையில் படக்குழுவினர் வெற்றி பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினரோடு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆகியோர் தங்களுக்குக் கிடைத்த வெற்றியை பகிர்ந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய சாம்ஸ், "படத்தை குறித்த விமர்சனம் வேறு விதமாக இருந்தாலும், ரசிகர்களுக்கு படம் ரொம்ப பிடித்து போய் விட்டது. வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்தது, இயக்குனர் எழில் ரசிகர்களின் நாடி துடிப்பை சரியாக கணித்து வைத்திருக்கிறார்” என்று பேசினார்.
சூரி பேசும் போது, "எழில் இருக்க பயமேன், எழில் ஒரு மினிமம் கேரண்டி இயக்குனர். எழில் சார் என்ன கொடுப்பார் என ரிலீஸுக்கு முன் நினைத்தேனோ அது படம் ரிலீஸுக்குப் பிறகு நிகழ்ந்துள்ளது என உதயநிதி திருப்தியோடு சொன்னார். உதயநிதி மாதிரி நல்ல மனிதருக்கு எல்லாமே நல்லதாகத் தான் நடக்கும்" என்று பேசினார்.
உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, "’ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்துக்கு பிறகு பெரிய வெற்றி படமாக அமைந்திருக்கிறது ’சரவணன் இருக்க பயமேன்’. இடையில் சில படங்கள் சரியாக ஓடவில்லையே தவிர, அவை தவறான படங்கள் இல்லை. ’பாகுபலி’ சுனாமிக்கு மத்தியில் படத்தை ரிலீஸ் செய்யலாமா? வேணாமா? என்ற தயக்கத்தில் தான் இருந்தேன். என் விநியோகஸ்தர் நண்பர்கள் கொடுத்த ஊக்கத்தினால் தான் ரிலீஸ் செய்ய முடிந்தது. குறிப்பிட்ட அளவு, நல்ல திரையரங்குகளை பிடித்து கொடுத்தார்கள். இன்னும் கூட 80 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது" என்று பேசினார்.