உண்மை நட்பை விட்டுத்தரக் கூடாது: நடிகர் சிம்பு

உண்மை நட்பை விட்டுத்தரக் கூடாது: நடிகர் சிம்பு
Updated on
2 min read

உண்மையான நட்பை விட்டுக் கொடுக்கவே கூடாது என்று நெகிழ்ச்சியாக கூறினார் நடிகர் சிம்பு.

2016-ம் ஆண்டுக்கான 'தமிழ்நாடு பிரிமீயர் லீக்' கிரிக்கெட் போட்டியில் பல்வேறு அணிகள் பங்கேற்கிறது. அதில் 'மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்' அணியின் லோகோ மற்றும் வீரர்களை அறிமுகப்படுத்தும் விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இந்திய அணியின் வீரேந்திர சேவாக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் 'மதுரை சூப்பர் ஜெயின்ட்ஸ்' அணிக்காக தமன் இசையில் சிம்பு பாடியிருக்கும் பாடல் வெளியிடப்பட்டது. சிம்பு, அனிருத், தமன், அருண்ராஜா காமராஜ், அழகிரி மனைவி காந்தி அழகிரி, அருள்நிதி, அனுஷா தயாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் சிம்பு பேசியது "இந்தியாவில் கிரிக்கெட் தான் மிகப்பெரிய விளையாட்டு என்பது அனைவருக்குமே தெரியும். என்னை எங்கப்பா சிறுவயதிலேயே பாட்டு பாடி, நடனமாடி சினிமாவில் நடிக்க வைத்திருந்தாலும், கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆசை தான் எனக்குள் எப்போதுமே இருந்திருக்கிறது.

என்னை U-13ல் தேர்வு செய்திருக்க வேண்டும், அதற்கு பதிலாக U-15ல் தேர்வு செய்துவிட்டார்கள். அப்போது சிறுவயது என்பதால் எனக்கு எப்படி நடக்கும் என்பது தெரியாது. அப்போது அப்பா, அம்மாவுக்கு தெரியாமல் கோயம்புத்தூருக்கு ரயிலில் டிக்கெட் எடுக்காமல் சென்றேன். என் வாழ்க்கையில் நான் தூங்காமல் இருந்ததே கிடையாது. அன்றைய இரவு முழுவதும் ரயிலில் நின்று கொண்டே சென்றேன். அதற்கு காரணம் கிரிக்கெட் மீது இருந்த ஈர்ப்பு தான் காரணம்.

அங்கும் எங்களை ஒரு சத்திரத்தில் படுக்க வைத்தார்கள். தரையில் படுத்து பழக்கம் இல்லாத நான் தரையில் படுத்தேன். தூக்கம் வரவில்லை. அப்போது பக்கத்தில் இருந்தவர்கள் கேட்ட போது "தரையில் படுத்து எனக்கு பழக்கமில்லை" என்றேன். அங்கிருந்த 4 பேர் அவர்களுடைய தலையணை எனக்கு ஒரு மெத்தையாக்கி என்னை தூங்க வைத்தார்கள். அந்த நட்பு உயர்ந்தது.

காதலித்த பெண்ணைக் கூட விட்டுக் கொடுக்கலாம், ஆனால் உண்மையான நட்பை விட்டுக் கொடுக்கவே கூடாது. எனக்கு நீண்ட நாட்களாகவே துரையைத் தெரியும். அவருக்கு முன்பாகவே நான் ஒரு அழகிரியின் ரசிகன். ஆனால் அவர் அரசியலில் இருப்பதால், வேறு மாதிரி எடுத்துக் கொள்வார்கள். அனைவருக்குமே பிள்ளைகளுக்கு துணையாக இருக்கும் பெற்றோர்கள் கிடைப்பது வரம். அப்படி கிடைத்ததால் தான் நான் இங்கு நிற்கிறேன்.

அவ்வளவு கஷ்டப்பட்டு கிரிக்கெட் விளையாட போயும் முதல் 3 மேட்ச் என்னால் விளையாட முடியாமல் போய்விட்டது. இறுதியாக விளையாடுவது தெரிந்து என் அப்பா என்னை பயங்கரமாக அடித்துவிட்டார். அதோடு கிரிக்கெட் பக்கம் போகவில்லை. அதற்குப் பிறகு சினிமாவுக்கு வந்தேன். தற்போது எனக்கு சினிமா தான் உயிர், கிரிக்கெட் ஒரு அங்கமாக இருக்கிறது. கிரிக்கெட் தான் உயிர் என்று இருப்பவர்களுக்கு நல்ல ஒரு இடமாக TNPL அமைந்திருக்கிறது. அதனை உபயோகப்படுத்தி பெரிய ஆளாக வர வேண்டும்" என்று தெரிவித்தார் சிம்பு.

</p>

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in