Published : 22 Sep 2013 03:15 PM
Last Updated : 22 Sep 2013 03:15 PM

6 மெழுகுவர்த்திகள் - விமர்சனம் : பதறவைக்கும் பயணம்

கதை, இயக்கம்: வி. இசட். துரை; திரைக்கதை, வசனம்: ஜெயமோகன்; நடிப்பு: ஷாம், பூனம் கவுர்; இசை : ஸ்ரீகாந்த் தேவா; ஒளிப்பதிவு : கிருஷ்ண மூர்த்தி; படத்தொகுப்பு: அருண்குமார்

டம் பார்க்கிறோம் என்ற உணர்வில்லாமல், திரையில் விரியும் உலகில் இறங்கி நடந்திருக்கிறீர்களா? கதாபாத்திரங்களின் துயரத்தைச் சகித்துக்கொள்ள முடியாமல், திரையரங்கின் உள்ளேயே, மனம் படபடக்கப் பிராத்தனை செய்திருக்கிறீர்களா? நீங்கள் கல்மனம் கொண்டவராக இருந்தாலும் 6 மெழுவர்த்திகள் உங்களைக் கோபம் கொள்ள வைக்கும். உங்களுக்கு 6 முதல் 10 வயதுக்குள் மகனோ மகளோ இருந்தால், படம் முடிந்ததும் ஓடிச் சென்று அவர்களை அரவணைத்துக்கொண்டு நிம்மதிப் பெருமூச்சு விடத் தோன்றும்.

குழந்தைகளையும் பெண்களையும் கடத்திப் பணம் பண்ணும் கொடூரமான நிழலுலகம் பற்றி ஒரு குடும்பத்தின் கண்ணீர் வழியாக வழியாகப் பேசியிருக்கிறார் இயக்குநர். 6 வயது மகனைத் தொலைத்துவிட்டு, தேசம் முழுவதும் தேடியலையும் ஒரு இளம் தகப்பனின் வாழ்க்கை வழியாக, குழந்தைக் கடத்தல், இனியாவது கண்டுகொள்ளப்பட வேண்டிய எரியும் பிரச்சனை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

இளம் தம்பதி ஷாம் - பூனம் கவுர், தங்களது ஒரே செல்ல மகன் கெளதமைத் தொலைத்துவிடுகிறார்கள். வாடகைக் கார் ஓட்டுனர் ஒருவரது உதவியுடன் குழந்தை மற்றும் பெண்களைக் கடத்தும் மாபியா கும்பல்களுக்கு மத்தியில் குழந்தையைத் தேடும் பீதியூட்டும் பயணமே மீதிக் கதை.

ஷாமை இளம் நாயகனாகப் பார்த்த அத்தனை பேருக்கும் அவர் தந்திருப்பது பெரிய ஆச்சரியம். குளிர் மிகுந்த வட இந்திய மாநிலங்களில் மகனைத் தேடி அவர் அலைந்து திரியும் காட்சிகள் இதயத்தைக் குத்திக் கிழிப்பவை.

மகனைத் தேடி மாதக்கணக்கில் தன்னைப் பிரிந்து வாழும் இளம் மனைவியாக நடிக்கும் பூனம் கவுர் “கௌதமும் இல்லாம நீயும் இல்லாமல் என்னால இருக்க முடியலப்பா! வந்துடு எத்தனை பிள்ளை'' வேணாலும் பெத்துத் தரேன்! என்று கதறும் காட்சியில் பெண்ணின் பேதை மனமும், ஒரு தகப்பனின் உறுதியும் உங்களை உறைய வைக்கும். ஜெயமோகனின் வசனங்கள் பல இடங்களில் அளவாகவும் கூர்மையாகவும் இருக்கின்றன! நடிகர் தேர்வில் இன்னும் கவனம் எடுத்திருக்கலாம். மகனைத் தேடியலையும் ஷாம், மனைவி பூனம் கவுரை ஓரே ஒருமுறை மட்டுமே தொலைபேசியில் தொடர்புகொள்வதாகக் காட்டு வதும், 50 லட்சம் புரட்டுவதில் இருக்கும் போராட்டத்தை அழுத்தமாகக் காட்டாததும் இடிக்கின்றன. ஒவ்வொரு ஃப்ரேமிலும் யாராவது ஓலமிடுகிறார். அழுகிறார். மயங்கி விழுகிறார்.

ஸ்ரீகாந்த் தேவாவுக்கு, இந்தப் படம் மறக்க முடியாத வாய்ப்பு! அதை ஓரளவு சரியாகவே பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். ஷாம் சுற்றியலையும் இடங்களுக்கு நாமும் சென்று வந்ததுபோல உணரவைக்கிறார் ஒளிப்பதிவாளர் கிருஷ்ண மூர்த்தி. படத்தொகுப்பாளர் அருண்குமார் உபரியாக ஒரு ஷாட்டைக் கூட விட்டுவைக்கவில்லை. சமூகப் பிரச்சினையைத் தாங்கிய த்ரில்லராக பயணிக்கிறது. இடையிடையே வரும் தொய்வுகளையும் தவிர்த்திருக்கலாம்.

இந்து டாக்கீஸ் தீர்ப்பு

கதையும் சில காட்சிகளும் கிளாஸ், மாஸ் இரு தரப்பினரையும் கவரும். அலுப்பூட்டும் சில காட்சிகளையும் ஆக்‌ஷன் காட்சிகளின் மிகைப்படுத்தலையும் தவிர்த்திருந்தால் மெழுகு வர்த்திகள் இன்னும் ஒளிர்ந்திருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x