பிரபாஸ், ராணா நடித்த ‘பாகுபலி 2’ படத்துக்கு தடை விதிக்க மறுப்பு

பிரபாஸ், ராணா நடித்த ‘பாகுபலி 2’ படத்துக்கு தடை விதிக்க மறுப்பு
Updated on
1 min read

நடிகர் பிரபாஸ், ராணா நடித்த ‘பாகுபலி 2’ படத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

நடிகர் பிரபாஸ், ராணா, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோர் நடித்த ‘பாகுபலி 2’ திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட தடை விதிக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த ஏஸ் மீடியா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

‘பாகுபலி 2’ படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை ஸ்ரீ கிரீன் புரொடக்க்ஷன் நிறுவனத்தின் ஷரவணன் பெற்றுள்ளார். அந்த நிறுவனம் இதைக்காரணம் காட்டி எங்களிடம் ரூ. 1.18 கோடி கடன் பெற்றுள்ளது. இந்த கடன் தொகையை ‘பாகுபலி 2’ படம் வெளியாகும் முன்பாக கூடுதலாக ரூ. 10 லட்சம் சேர்த்து கொடுப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் சொன்னபடி பணத்தை திருப்பித்தராமல், மூன்றாவது நபர் மூலமாக வரும் ஏப்ரல் 28-ம் தேதி இப்படத்தை திரையிட ஷரவணன் திட்டமிட்டுள்ளார். எனவே எனது கடன் தொகையை அடைக்கும் வரை ‘பாகுபலி 2’ படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு நடந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜாரன வழக்கறிஞர், ‘‘எங்களிடம் வாங்கிய கடனை அடைக்கும்வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’’ என வாதிட்டார்.

அதற்கு நீதிபதி, ‘‘எதிர் மனுதாரர்களின் கருத்தை அறிந்த பிறகுதான் அதுகுறித்து முடிவு செய்யப்படும் எனக்கூறி தடை விதிக்க மறுத்தார். இதுதொடர்பாக ஸ்ரீ கிரீன் புரொடக்க்ஷன் நிறுவனம் வரும் ஏப்ரல் 18-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in