

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதற்கு இயக்குநர் ராஜமெளலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
'பைரவா' படத்தைத் தொடர்ந்து, அட்லீ இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பு தொடங்கப்பட்டது குறித்து இயக்குநர் அட்லீ, "#விஜய்61 படப்பிடிப்பு உங்களுடைய ஆசிர்வாதங்களுடன் தொடங்கப்பட்டது. அனைவரது வாழ்த்துக்களுக்கும் நன்றி. ராஜமெளலி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். கனவு கைவசமான தருணம்" என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இப்படத்துக்கு அட்லீ கதை - வசனம் எழுத, ராஜமெளலி தந்தை விஜயேந்திர பிரசாத் திரைக்கதை அமைத்துள்ளார். ஆகையால் இப்படக்குழுவுக்கு ராஜமெளலி தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.
சத்யராஜ், வடிவேலு, ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா, எஸ்.ஜே.சூர்யா, கோவை சரளா, சத்யன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். .ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகவும், ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவாளராகவும், ஆண்டனி ரூபன் எடிட்டராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.
சென்னை படப்பிடிப்பைத் தொடர்ந்து வட இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 100வது படமாக இப்படம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.