ஜோதிகா திடீர் விலகல்: விஜய் - அட்லீ படக்குழுவினர் அதிர்ச்சி

ஜோதிகா திடீர் விலகல்: விஜய் - அட்லீ படக்குழுவினர் அதிர்ச்சி
Updated on
1 min read

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திலிருந்து ஜோதிகாவின் திடீர் விலகலால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

'பைரவா' படத்தைத் தொடர்ந்து, அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு அட்லீ கதை - வசனம் எழுத, இயக்குனர் ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் திரைக்கதை அமைத்துள்ளார்.

சத்யராஜ், வடிவேலு, ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா, எஸ்.ஜே.சூர்யா, கோவை சரளா, சத்யன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில், இப்படத்திலிருந்து ஜோதிகா விலகியுள்ளார். முழுக்கதையையும் கேட்டு, தன்னுடைய கதாபாத்திரத்தின் உடைகள் வடிவமைப்பக்கு ஒத்துழைத்தல் உள்ளிட்ட அனைத்தையும் 2 மாதங்களில் முடிந்துவிட்டார் ஜோதிகா. ஆனால், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முந்தைய நாள் அப்படத்தில் தான் நடிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனால் படக்குழு பெரும் அதிர்ச்சியடைந்தது.

முதற்கட்ட படப்பிடிப்பில் விஜய் - ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சிகளை 28 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருந்தார்கள். ஜோதிகாவின் விலகலால் முதற்கட்ட படப்பிடிப்பில் பெரும் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது விஜய் மட்டும் பங்குபெறும் காட்சிகளை காட்சிப்படுத்தி வருகிறார்கள். ஜோதிகாவுக்கு பதிலாக வேறு ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகவும், ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவாளராகவும், ஆண்டனி ரூபன் எடிட்டராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 100வது படமாக இப்படம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in