

10 வருடங்களுக்கு படம் இயக்காதீர்கள், 'ப.பாண்டி' படமே தாங்கும் என்று தனுஷுக்கு ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங், ரேவதி, மடோனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ப.பாண்டி'. தனுஷ் தயாரித்துள்ள இப்படத்தை ராஜராஜன் வெளியிடவுள்ளார். ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியீடாக இப்படம் வெளியாகவுள்ளது.
'ப.பாண்டி' படத்தை ரஜினிக்கு மட்டும் பிரத்யேகமாக திரையிட்டு காட்டியுள்ளார் தனுஷ். முழுப்படத்தையும் பார்த்துவிட்டு தனுஷை கட்டிப்பிடித்து பாராட்டியுள்ளார் ரஜினி.
இந்நிகழ்வு குறித்து படக்குழுவினரிடம் பேசிய போது, "தனுஷிடம் ரஜினி, "ரொம்ப நல்லாயிருக்கு தனுஷ். இன்னும் கொஞ்ச நாளைக்கு படம் இயக்காதீர்கள். இந்தப் படமே உங்கள் இயக்கத்துக்கு ஒரு சான்றாக நீண்ட நாட்கள் இருக்கும்.
'நாடோடி மன்னன்' படத்துக்குப் பிறகு எம்.ஜி.ஆர் சார், தன்னுடைய இயக்கத்தில் படம் பண்ண நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டார். அதே போல இந்தப் படமும் நீண்ட நாட்கள் உங்களுடைய இயக்கத்துக்கு ஒரு சான்றாக அமையும்.
நீங்களும் ஒரு 10 ஆண்டுகள் கழித்து படம் இயக்குங்கள். அதுவரை 'ப.பாண்டி' படத்தைப் பற்றி அனைவரும் பேசுவார்கள்” என்று கூறினார்" என படக்குழுவினர் தெரிவித்தார்கள்.