

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வந்த 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்று இருக்கிறது.
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'அச்சம் என்பது மடமையடா'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை ஒன்றாக எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் கெளதம் மேனன்.
இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நிறைவுபெறும் தருவாயில் இருக்கிறது. இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் 'தள்ளிப் போகாதே' பாடலை மட்டும் படமாக்காமல் இருந்தது படக்குழு.
இதனிடையே கெளதம் மேனன் - சிம்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இப்படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது. சிக்கல் தீர்ந்து, தற்போது சிக்கல் தீர்ந்து 'தள்ளிப் போகாதே' பாடலை படமாக்க பாங்காக் சென்றது படக்குழு.
2 நாட்களில் பாடல் படப்பிடிப்பை முடித்தது படக்குழு. இதனை இயக்குநர் கெளதம் மேனன், சிம்பு, மஞ்சிமா மோகன் மூவருமே தங்களது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தி இருக்கிறார்கள்.
இப்பாடலின் எடிட்டிங் பணிகள் முடித்து, படத்துடன் இணைத்து தணிக்கைக்கு விண்ணப்பிக்க இருக்கிறது படக்குழு. செப்டம்பர் 30ம் தேதி இப்படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.