உறியடி மீண்டும் ரிலீஸ்: இயக்குநர் விஜயகுமார் வேண்டுகோள்

உறியடி மீண்டும் ரிலீஸ்: இயக்குநர் விஜயகுமார் வேண்டுகோள்
Updated on
1 min read

'உறியடி' திரைப்படத்தை மீண்டும் வெளியிடுவது தொடர்பாக அப்படத்தின் இயக்குநர் விஜயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விஜயகுமார், மைம் கோபி, சந்துரு குமார், சிவகுமார், ஜெயகாந்த் வேலு உள்ளிட்ட பலர் நடிக்க விஜயகுமார் இயக்கி, தயாரித்த படம் 'உறியடி'. மே 27ம் தேதி வெளியான இப்படத்துக்கு விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

மேலும், பல்வேறு திரையுலக பிரபலங்களும் இப்படம் கண்டிப்பாக வெற்றியடைய வேண்டிய திரைப்படம் என்று தங்களது ஆதரவை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வந்தார்கள். இப்படம் வெளியான போது, தமிழகத்தின் சில இடங்களில் வெளியாகவில்லை. இப்படம் வெளியாகி 2 வாரங்கள் முடிவடைய இருப்பதால், பல திரையரங்குகளில் இருந்து எடுத்துவிட இருக்கிறார்கள்.

இது குறித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் விஜயகுமார், "அன்பு ரசிகர்களே, நீங்கள் சென்னைவாசி என்றால், உங்களுக்கு 'உறியடி' படம் பார்க்க வேண்டும் என்றால் நாளை திரையரங்கத்துக்கு செல்லுங்கள். வெள்ளிக்கிழமை ஒரு காட்சியை தாண்டி படம் நீட்டிக்கப்படுமா எனத் தெரியவில்லை.

மற்ற நகரங்களிலும் படத்தின் வெளியீட்டை விரிவுபடுத்த அதிகபட்ச முயற்சிகள் எடுத்து வருகிறோம். படத்தைப் பற்றி மக்கள் ட்விட்டர்/பேஸ்புக் போன்ற இடங்களில் பேசி, விவாதித்து, படத்தை தங்கள் ஊரில் பார்க்க விரும்புகிறார்கள் என வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நிரூபித்தால் மட்டுமே படம் வெளியாகும்.

உங்கள் ஊர்களில் படம் வெளியாகுமா என நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல எனக்கு விருப்பம் தான். ஆனால் முடியவில்லை. விரைவில் திரையரங்க பட்டியலை வெளியிடுகிறேன். பண்பலை மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் போய்க்கொண்டிருக்கின்றன. 'உறியடி' படத்தை கொண்டு சேர்க்க அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொண்டு விட்டேன்” என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in