‘வால்டர்’ தலைப்பு சிக்கல் தீர்ந்தது: தயாரிப்பாளர் பிரபு திலக்

‘வால்டர்’ தலைப்பு சிக்கல் தீர்ந்தது: தயாரிப்பாளர் பிரபு திலக்
Updated on
1 min read

‘வால்டர்’ படத்தின் தலைப்பு சிக்கல் தீர்ந்தது என தயாரிப்பாளர் பிரபு திலக் தெரிவித்துள்ளார்.

புதுமுக இயக்குநர் அன்பரசன் இயக்கத்தில் சிபிராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துவரும் ‘வால்டர்’ படத்தின் பூஜை, கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. இந்தப் படத்தை 11:11 புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் பூஜை புகைப்படங்கள் மற்றும் படக்குழுவினர் சம்பந்தப்பட்ட விவரங்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டன.

ஆனால், அன்று மாலையிலேயே ‘வால்டர்’ படக்குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்தார் தயாரிப்பாளர் சிங்காரவேலன். ‘வால்டர்’ படத்தின் கதையும், படத்தின் தலைப்பும் தன் வசமே இருக்கிறது என்றும், இதே கதையை வேறு நடிகர்களை வைத்து தனது அனுமதி இல்லாமல் தயாரிக்க முற்பட்டால், சம்பந்தப்பட்ட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது காப்பிரைட் சட்டத்தின்கீழ் நீதிமன்றம் மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

‘கழுகு 2’ படத்தைத் தொடர்ந்து மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரிக்கத் திட்டமிடப்பட்ட படம் ‘வால்டர்’. இதன் லோகோ வடிவமைப்புடன் கூடிய போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை அன்பரசன் இயக்கவிருந்தார். இதில் விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இதற்காக அர்ஜுன், விக்ரம் பிரபு இருவருடனும் இயக்குநர் அன்பரசன் மற்றும் சிங்காரவேலன் சந்தித்த புகைப்படங்களும் வெளியிடப்பட்டன.

ஆனால், படப்பிடிப்பு தொடங்க தாமதமானதால், இயக்குநர் அன்பரசன் இதே கதையை வேறொரு தயாரிப்பாளரிடம் கூறி படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. எனவே, சிங்காரவேலன் எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், இருதரப்பும் சமரசமாகியுள்ளனர். ‘வால்டர்’ தலைப்பை, சிங்காரவேலன் தங்களது நிறுவனத்துக்குத் தந்துவிட்டதாகத் தயாரிப்பாளர் பிரபு திலக் தெரிவித்துள்ளார். தற்போது கும்பகோணத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

சிபிராஜ் ஜோடியாக ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் நடித்த ஷிரின் காஞ்ச்வாலா நடிக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in